மோனலிசா
கவனக்குறை மிகைச்சுறுதி குறைபாடு (Attention Deficit Hyperactivity Disorder - ADHD) எனப்படும் கவனச்சிதறல் மற்றும் அளவுக்கு அதிகமான செயலாக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சிறப்பு நுண்தளத்தை (microsite) 'அன்லாக்கிங் ஏடிஎச்டி (Unlocking ADHD)' தொண்டு நிறுவனம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, ஜூலை ஒன்றாம் தேதி வெளியிடவிருக்கிறது.
தமிழில் வெளியிடப்படும் இந்த நுண்தளத்தில் 'ஏடிஎச்டி'க்கான அறிகுறிகள், அக்குறைபாட்டைச் சரிசெய்ய உதவும் வழிமுறைகள், தக்க சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்கள் இடம்பெறும்.
ஜூலை ஒன்றாம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை 'ஸூம்' செயலி வழியாக நடக்கவிருக்கும் இந்நிகழ்வில் 'ஏடிஎச்டி - கண்டறிதல் மற்றும் சமாளித்தல்' எனும் கருத்தரங்கும் இடம்பெறும்.
'ஏடிஎச்டி' குறைபாடு இருப்பதை மருத்துவர் மூலம் கண்டறிவதன் அவசியம், பரவலான அறிகுறிகள், அதனை அறியாமல் இருப்பதன் விளைவுகள் பற்றி இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படும்.
இக்கருத்தரங்கில் உளவியல் வல்லுநர் எஸ்.சி.அன்பரசு, 'ஏடிஎச்டி'யை எதிர்கொள்ளும் பிள்ளைக்குத் தாயான திருவாட்டி உமா முத்தையன், 'ஏடிஎச்டி'யை எதிர்கொள்ளும் தொண்டூழியர் பாஹியா பஷீர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இணை விரிவுரையாளரான ஜெட் செந்தில் இக்கருத்தரங்கை வழிநடத்தவிருக்கிறார்.
அத்துடன், மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியின் சிறப்பு உரையும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள பின்வரும் இணையத்தள முகவரியில் பதிவு செய்யலாம்: https://bit.ly/adhdtamil