மனமுடைந்து போகும் ஒருவர் இறப்பது என்பது ஒரு சோகமான காதல் கதை போன்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு மரணம் நிகழ்வதும் சாத்தியமே.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 19 பிள்ளைகளுடன் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்த ஆசிரியர்களில் ஒருவரான 48 வயது இர்மா கார்சியா என்பவரின் கணவர் திரு ஜோ கார்சியா, 50, தம் மனைவிக்கான இறுதிச் சடங்கு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
"ஜோ மனமுடைந்து போனதால்தான் இறந்தார் என்று நான் நம்புகிறேன். 25 ஆண்டுகளுக்கு மேல் தம் மனைவி மீது உயிரையே வைத்திருந்த அவர், சோகம் தாங்காமல் இறந்தார்," என்று உறவினர் ஒருவர் கூறினார்.
எதனால் இது ஏற்படுகிறது?
ஏதேனும் ஒரு துயரச் சம்பவம் நேர்ந்தால் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள், குறிப்பாக ரத்த ஓட்டத்தையும் மூச்சு விடுவதையும் துரிதமாக்கும் 'அட்ரெனலின்' (adrenaline) ஹார்மோன் அதிகரித்துவிடும். இதனால் இதயத் தசைகள் பலவீனமாவதுடன் மாரடைப்பும் ஏற்படலாம்.
இதையே 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' (broken heart syndrome) என்பர்.
மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒரு சம்பவம் நிகழும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் ஒருவரது உடலில் அதிகமான அட்ரெனலின் உருவாகும்.
இருப்பினும், அளவுக்கு அதிகமான அட்ரெனலின் உருவாகும்போது இதயத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் சிறிய தமனிகள் குறுகிவிடும். இதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைந்துவிடும் என்று கிளனிகல்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகரும் இதயநோய் நிபுணருமான டாக்டர் ரோஹித் குரானா விளக்கினார்.
இதயச் செயல்பாட்டை முடக்கி மரணம் ஏற்படும் அபாயத்தை இந்த 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' ஏற்படுத்திவிடலாம் என்று தேசிய பல்கலைக்கழக இதய நிலையத்தின் மூத்த ஆலோசகரும் இதயநோய் நிபுணருமான பேராசிரியர் டான் ஹுவே சீம் கூறினார்.
சிங்கப்பூரில் பதிவாகும் சம்பவங்கள்
கடந்த பத்து, இருபது ஆண்டுகளாகத்தான் சிங்கப்பூர் இதை ஒரு நோயாகக் கருதுகிறது என்றும் அவர் சொன்னார்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் முதன்முதலில் 2005ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியது என்றும் ஆண்டுக்குச் சுமார் 600 மாரடைப்புச் சம்பவங்கள் பதிவானால் 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' காரணத்தால் நேர்பவை இரண்டு, மூன்று சம்பவங்கள் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
நெருக்கமான ஓர் உறவின் மரணம், கடுமையான வாக்குவாதம், தீரா அச்சம், அதிர்ச்சி, அடக்க முடியாத ஆத்திரம் போன்ற சூழல்களில் ஒருவருக்கு 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' ஏற்படலாம்.
மோசடியில் பணத்தை இழந்தவர், குடியிருப்பு வட்டாரத்தில் குரைக்கும் நாயால் பயந்தவர், கண்புரை அறுவை சிகிச்சைக்கு அஞ்சியவர் போன்றோருக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று நினைவுகூர்ந்தார் பேராசிரியர் டான். மகிழ்ச்சியான தருணங்களும் இந்தப் பிரச்சினைக்கு இட்டுச் செல்லலாம். லாட்டரியில் பணம் வெல்வது, பிடித்தமான விளையாட்டுக் குழுவுக்கு வெற்றி கிட்டுவது போன்ற சூழல்களிலும் ஒருவருக்கு 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' ஏற்படலாம்.
நடுத்தர வயது மாதருக்கு ஏற்படும் அபாயம் அதிகம்
ஆண்கள், பிள்ளைகளுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம் என்றாலும் நடுத்தர வயதுடைய மாதரே அதிக அபாயத்தில் உள்ளதாக பேராசிரியர் டான் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபரில் அமெரிக்க இதயவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' தொடர்பில் பதிவான சம்பவங்களில் பெண்கள் தொடர்பானவை 88% என்றும் அவர்கள் குறிப்பாக 50 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டது.
இந்தியாவில் தனியாக வாழ்ந்து வந்த 80 வயது மாது ஒருவருக்கு அண்மையில் இந்த 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' இருந்ததை உறுதிப்படுத்தியது குறித்து டாக்டர் குரானா பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூரில் வசிக்கும் தம் குடும்பத்தாரைக் காண்பதற்காக அந்த மாது தனியாகப் பயணம் செய்ய வேண்டிய சூழல். இதனால் அவருக்குப் பதற்றம் அதிகரித்துவிட்டது. சிங்கப்பூருக்கு வரும் விமானத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் விமானத்தை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்புமாறு விமானப் பணியாளர்களிடம் அவர் கேட்கத் தொடங்கிவிட்டதாக டாக்டர் குரானா தெரிவித்தார்.
சிங்கப்பூர் வந்ததும் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். கடுமையான நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், வியர்வை என இருந்த அவரைச் சோதித்துப் பார்த்ததில் அவரின் பயணம் காரணத்தால் அவருக்கு ஒருவிதத் துன்பம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது. அவருக்கு நேர்ந்தது 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம்' என்று உறுதிப்படுத்தப்பட்டது.
மருந்தும் நிவாரணமும்
பொதுவாக இந்தப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதயத் துடிப்பை மெதுவடையச் செய்யவும் அட்ரெனலின் மற்றும் இதர மன அழுத்த ஹார்மோன்களின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் மருந்து தரப்படும். இரண்டு முதல் நான்கு வாரங்களில் நோயாளிகள் குணமடைந்துவிடுவர் என்றார் பேராசிரியர் டான்.
மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். முடிந்தவரை உங்களுக்குள் விரும்பத்தகாத உணர்ச்சிகளை எழுப்பும் நபர்களையோ சூழல்களையோ தவிர்த்துவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் குரானா.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்