சிங்கப்பூரின் பாஸ்கர் கலைக் கழகம் அதன் 70வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு குறிக்கும் வகையில் அதன் வருடாந்திரக் கலைவிழாவை எட்டு நாள்களுக்கு நடத்தவுள்ளது. இந்தக் கலைவிழா இரு பாகங்களாக நடந்தேறும்.
கலாசார பதக்கம் பெற்ற பாஸ்கர் கலைக் கழகத்தின் தலைமை நடன இயக்குனரும் கலை இயக்குநருமான சாந்தா பாஸ்கர், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் காலமானதை அடுத்து அவரது வாழ்க்கையையும் கலைப்பணியையும் இவ்வாண்டின் கலைவிழா சிறப்பிக்கவுள்ளது.
கலைவிழாவில் கரகாட்டம் போன்ற பழம்பெரும் நாட்டுப்புற நடனங்கள் முதல் கதக்களிவழி கதைசொல்லும் படைப்பு வரை பலதரப்பட்ட இந்திய நடன வகைகளைக் காண முடியும்.
மேலும், கலைக் கழகத்தின் புல்லாங்குழல் குழுவும் புதிதாகத் தங்களின் பயணத்தைத் தொடங்கவுள்ளது. இக்குழுவைத் தொடங்குவது திருமதி பாஸ்கரின் நீண்டநாள் கனவாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இசையமைப்பாளரும் கலைஞருமான டாக்டர் கானவிநோதன் தலைமையில் பதின்ம வயது முதல் 50களில் உள்ளவர் வரை இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
நேற்று தொடங்கி ஜூலை 3ஆம் தேதிவரையிலும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரையிலும் கலைவிழாவின் இரண்டு பாகங்கள் நடந்தேறுகின்றன.
ஒரு நாள் நிகழ்வுக்குச் செல்ல விரும்புவோர் $20 நுழைவுச்சீட்டையும் எட்டு நாள்களுக்கான $136 கலைவிழா அனுமதிச்சீட்டையும் வாங்கலாம்.

