தமது 72வது வயதில் முதல்முறையாக நடிகராக மேடை ஏறவுள்ளார் திருவாட்டி ருக்கு பக்கிரிசாமி.
கொவிட்-19 காலத்தில் தன்னலம் கருதாது பிறருக்குத் தம்மால் ஆனதை செய்ய முன்வந்த பல தொண்டூழியர்களில் ஒருவர் திருவாட்டி ருக்கு.
வசதி குறைந்தவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் தினமும் சமைத்து, அதைப் பொட்டலம்கட்டி அவர்கள் வசிக்குமிடத்திலேயே சென்று கொடுத்து வந்தார்.
மேலும் முகக்கவசம், உணவு விநியோகம் ஆகியவற்றிலும் அவர் பங்காற்றியுள்ளார்.
இவரைப்போல நோய்த்தொற்று காலத்தில் சிங்கப்பூரர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்தனர் என்பதை விளக்கும் மேடை நாடகம் வடக்கு-மேற்கு வட்டாரக் கொண்டாட்டத்தில் அரங்கேற உள்ளது.
இந்த நாடகத்தில் திருவாட்டி ருக்குவும் பங்கேற்கிறார்.
மூன்று பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் ஏழு கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் உள்ள அவர், மூப்பிலும் துடிப்பு குறையாதவர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீ சூன் கிழக்கு வட்டாரத்தில் அடித்தளத் தலைவராக செயல்பட்டுவருகிறார் இவர்.
"நம்முடைய வாழ்வை இயன்றவரை அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதாய் அமைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய நற்செயலால் ஒருவர் முகத்தில் புன்னகையை வரவழைக்க முடிந்தால் அதைவிட பெருமை வேறு இல்லை" என்று திருவாட்டி ருக்கு உற்சாகமாய் கூறினார்.
- செய்தி: மோனலிசா

