மதுபானம் அருந்துவதால் பெரியவர்களைவிட இளையர்களுக்கே சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் 'தி லான்சட்' மருத்துவ சஞ்சிகையில் நேற்று வெளியிடப்பட்டன.
மதுப் பழக்கம் தொடர்பில் அவரவர் வசிக்கும் பகுதி, அவரின் வயது, பாலினம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு மிகத் துல்லியமான விவரங்களை வெளியிட்டுள்ள முதல் மருத்துவ ஆய்வு இது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒருவர் வசிக்கும் பகுதி, அவரின் வயது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே மது அருந்துவதன் தொடர்பிலான வழிமுறைகளை வரையவேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது. குறிப்பாக 15லிருந்து 39 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கு ஆகக் கட்டுப்பாட்டான வழிமுறைகளைப் பரிந்துரைப்பது நல்லது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் மது அருந்துவதால் இந்த வயதுப் பிரிவில் இருக்கும் ஆண்களுக்கே அபாயம் அதிகம் இருப்பது இதற்குக் காரணம்.
சிறிதளவு மது அறுந்துவதன் மூலம் சுகாதாரப் பிரச்சினை ஏதும் இல்லாத 40 வயதைத் தாண்டியோர் பலனடையக்கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அத்தகையோர் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அவர்களுக்கு நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது பலன்களில் ஒன்று.
204 நாடுகளில் மக்களின் மதுப் பழக்கத்தின் தொடர்பிலான கணிப்புகள் கருத்தில்கொள்ளப்பட்டன. அவ்வாறு 2020ஆம் ஆண்டில் 1.34 பில்லியன் மக்கள் அளவுக்கு அதிகமாக மதுபானம் உட்கொண்டது தெரியவந்தது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் 15லிருந்து 35 வயதுக்கு உள்பட்ட ஆண்கள்தான் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துகின்றனர். அந்தப் பழக்கத்தால் இப்பிரிவினருக்கு எவ்வித சுகாதாரப் பலன்களும் இல்லை. மாறாக, இவர்களுக்கு சுகாதார ரீதியாக ஆபத்துதான் அதிகம் உள்ளதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மதுப் பழக்கம் தொடர்பிலான 60 விழுக்காட்டுக் காயங்கள் இந்தப் பிரிவினரிடையேதான் அதிகம் ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வாகன விபத்துகள், உயிரை மாய்த்துக்கொள்வது உள்ளிட்டவற்றின் தொடர்பிலான காயங்கள் அவற்றில் அடங்கும்.
"நாங்கள் சொல்ல நினைப்பது இதுதான்: இளையர்கள் மது அருந்தக்கூடாது, ஆனால் சிறிதளவு மது அருந்துவதால் வயதில் மூத்தவர்கள் பலனடையலாம்," என்று ஆய்வை மேற்கொண்டோரில் ஒருவரான மூத்த ஆய்வு ஆசிரியர் இம்மேனுவெலா கக்கிடூ சொன்னார். அவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் சுகாதாரக் கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
"இளையர்கள் அறவே மது அருந்தமாட்டார்கள் என்று எண்ணுவது யதார்த்தத்துக்கு மாறானதாக இருக்கலாம், ஆனால் அப்பழக்கம் விளைவிக்கக்கூடிய அபாயங்களுக்கான ஆக அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆதாரத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். அப்போதுதான் அனைவராலும் உடல்நலம் தொடர்பில் நல்ல முடிவுகளை எடுக்கமுடியும்," என்றும் அவர் சொன்னார்.

