'ஃபேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் ஒருவர் ஐந்து பக்கங்கள் வரை வைத்திருக்க வகைசெய்யப்போவதாக அதை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் தங்களின் விருப்பங்கள், உறவுகள் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்றவாறு மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம் என்று மெட்டா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் தங்களின் நண்பர்களுக்கு ஏற்ற பதிவுகளை ஒரு பக்கத்தில் பதிவிடலாம். வேறு பக்கத்தில் தங்களின் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஏற்றவற்றைப் பதிவிடலாம் என்று மெட்டா சொன்னது.
இதன் மூலம் ஃபேஸ்புக்கில் கூடுதல் நீக்குப்போக்கு ஏற்படுகிறது.
எனினும், ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் ஒரே பக்கம் இருக்கவேண்டும் என்ற விதிமுறையை மெட்டா தொடர்ந்து வலியுறுத்தும். பயனீட்டாளரின் தலைமை பக்கம் அவரின் சொந்தப் பெயரையும் கொண்டிருக்கவேண்டும்.
அந்தப் பக்கத்திற்குச் சென்று அதிலிருந்துதான் பயனீட்டாளர் தனது இதர பக்கங்களுக்குப் போகமுடியும்.
பயனீட்டாளர்களின் மற்ற பக்கங்கள் அவரின் சொந்தப் பெயரைக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாற்றம், உலகின் ஆகப் பெரிய சமூக வலைத்தளமாகக் கருதப்படும் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை முழுமையாக வெளியிடாமல் இருக்க வகைசெய்கிறது. டிக்டாக், டுவிட்டர் மெட்டாவிற்குச் சொந்தமான இன்ஸ்டகிராம் ஆகிய இதர சமூக வலைத்தளங்களில் இந்த நீக்குப்போக்கு தற்போது இருக்கிறது.
ஒரு பயனீட்டாளரின் தலைமை பக்கத்தின் வாயிலாக மட்டுமே சில சேவைகளைப் பயன்படுத்தமுடியும் என்று கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதற்குப் பொறுப்பு வகிப்பது, 'ஃபேஸ்புக் டேட்டிங்' எனும் அந்தத் தளத்தின் மூலம் காதல் ஜோடிகளைத் தேடிக்கொள்வது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
தவறான அர்த்தத்தைத் தரக்கூடிய அடையாளங்கள், பிறரின் அடையாளத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிரான தனது விதிமுறைகள் எல்லா ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கும் பொருந்தும் என்று மெட்டா அறிக்கையில் தெரிவித்தது.
சில நாடுகளில் இந்த மாற்றம் சோதிக்கப்படுவதாக மெட்டாவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஆனால் அந்த நாடுகள் குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
ஃபேஸ்புக் பயனீட்டாளர்களைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருக்க மெட்டாவின் முயற்சியாகவும் இந்த மாற்றத்தை சிலர் கருதுகின்றனர். டிக்டாக் போன்ற இதர சமூக வலைத்தளங்களுடன் இருந்துவரும் போட்டியைச் சமாளிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மெட்டா முதன்முறையாக மனித உரிமை விவரங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இணையத்தில் நிகழும் துன்புறுத்தல் சம்பவங்களை மெட்டா சரிவரக் கவனிக்கவில்லை என்ற குறை சில தரப்பினரிடையே இருக்கும் வேளையில் அறிக்கை வெளியிடப்பட்டது.

