வீட்டில் இருந்தபடி வேலை பார்ப்பது என்பது முன்பெல்லாம் அரிதான ஒன்று. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு அது அதிகம் பின்பற்றப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போது கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து உலகம் மீண்டு வந்துகொண்டிருப்பதால் பலர் மீண்டும் தங்களின் வேலையிடங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆனால் முன்பைப்போல் தினமும் அலுவலகத்தில் வேலை செய்யும் போக்கு இப்போது இல்லை.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் வீட்டில் வேலை பார்க்கும் முறையைப் பின்பற்றுமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன. தினமும் வேலையிடத்துக்கு வருமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தினால் அவர்களில் பலர் வேலையிலிருந்து விலகிவிடுவர் என்றும் சில கருத்தாய்வுகள் தெரிவிக்கின்றன.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது மனைவுளைச்சலின்றி சொந்த வேலைகள், குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்டவற்றைக் கவனித்துக்கொண்டபடி பணியில் ஈடுபடலாம் போன்ற காரணங்களால் பல ஊழியர்கள் இதை விரும்புகின்றனர்.
ஆனால் விட்டில் வேலை பார்க்கும்போது வேறு சில சவால்கள் இருக்கவே செய்கின்றன.
அலுவலகத்தில் வேலை செய்யும்போது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற நிலை இருக்கும். வீட்டில் வேலை பார்க்கும்போதோ வேலை நேரத்திற்கு அப்பாலும் பணியில் ஈடுபடும் சூழல் உருவாவதாக சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
உதாரணமாக வீட்டில் வேலை பார்க்கும்போது எந்நேரத்திலும் நிர்வாகிகளிடமிருந்து மின்னஞ்சல்கள் வரக்கூடும். அவற்றுக்குப் பதிலளிக்கும் கட்டாயத்தில் இருப்பதாக ஊழியர்கள் கூறினர்.
சுருக்கமாகச் சொன்னால் வேலைச் சூழல், வீடு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இல்லாமல் போகிறது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் சில பலன்கள் இருந்தாலும் அதனால் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிடுவதாக அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1,200 பேரைக் கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஒரு கருத்தாய்வை நடத்தியது. வீட்டில் வேலை பார்க்கத் தொடங்கியதிலிருந்து மனவுளைச்சல் அதிகமானதாக அந்தக் கருத்தாய்வில் பங்கேற்றோரில் 71 விழுக்காட்டினர் கூறினர்.
அதற்குப் பிறகு இவ்வாண்டு ஜனவரி மாதமும் 1,076 ஊழியர்களைக் கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றொரு கருத்தாய்வை நடத்தியது. ஈராண்டுகளுக்கு முன்பு கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கி யதிலிருந்து கூடுதல் நேரம் வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளதாக அதில் பங்கேற்றோரில் இருவரில் ஒருவர் தெரிவித்தார்.
வீட்டுப் பொறுப்புகளுக்கும் வேலை நேரத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது, வேலையிலிருந்து விலகிய சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து செய்யவேண்டியிருப்பது. இவை, வீட்டில் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டியதற்கான முக்கிய காரணங்களில் சில என்பது தெரிவிக்கப்பட்டது.
இது எதிர்பார்த்ததே என்கின்றனர் சில கவனிப்பாளர்கள். உலகளவிலும் கொவிட்-19 பலரின் வேலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் சிலர் வார இறுதி நாள்களில் வேலை செய்ய நேரிடுகிறது. குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி அவர்கள் அடிக்கடி பணியில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய பிரச்சினைகளைச் சரிசெய்ய கூடுதல் நாள்கள் வேலையிடத்திற்குக் சென்று வேலை பார்க்கலாம். ஆனால், அப்படித்தான் செய்யவேண்டும் என்பதில்லை.
வீட்டில் வேலை செய்யும்போது அவ்வப்போது ஓய்வு எடுக்கலாம். குடும்பத்தாருடன் வேலைக்குத் தொடர்பில்லாத விவகாரங்களைப் பற்றிப் பேசலாம். சில நிமிடங்களுக்கு சொகுசு நாற்காலியில் அமர்ந்தும் ஓய்வு எடுக்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
மெய்நிகரில் வேலை சந்திப்பில் கலந்துகொள்ளும்போது முடியும்போதெல்லாம் முகத்தைக் காட்டாமல் பங்கேற்கலாம் என்று 'ரேவன் கௌன்சலிங் அண்ட் கொன்சல்டன்சி' மனநல ஆலோசனை நிலையத்தில் மனநல நிபுணராகப் பணியாற்றும் திரு பிரவீன் நாயர் அறிவுரை வழங்குகிறார். இதன் மூலம் மூளைக்கு சற்று ஓய்வு கிடைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் சிலர் வீட்டில் வேலை பார்ப்பதற்குப் பழகியிருக்கலாம். இத்தகையோருக்கு வீட்டில் வேலை பார்ப்பது, அலுவலகத்திற்குச் செல்வது இரண்டையும் கையாள்வது சிரமமாக இருக்கக்கூடும்.
படிப்படியாக இந்த முறைக்கு மாறிக்கொள்ளலாம். வாரந்தோறும் இரண்டு நாள்களுக்கு வீட்டில் வேலை பார்ப்பது நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்பில் தங்களுக்கு எது நல்லது என்பதை அறிந்து எத்தகைய முயற்சிகளை எடுக்கலாம், அவற்றில் எவை ஆக்கபூர்வமானவை ஆகியவற்றை நிர்வாகியுடன் கலந்துபேசுமாறு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் சிங்கப்பூர் மனிதவளக் கழகத்தின் தலைவர் லோ பெக் கெம்.
ஒரு நாளில் செய்துமுடிக்கவேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பதைக் குறித்துவைக்குமாறும் திரு நாயர் பரிந்துரைக்கிறார்.
இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தும் சிரமங்களை எதிர்நோக்கினால் வேலை தொடர்பில் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கக்கூடிய நிபுணத்துவ ஆலோசகரை நாடலாம் என்று குறிப்பிடப்படுகிறது. நமது நேரத்திற்கு நாமே பொறுப்பு என்பது வலியுறுத்தப்படுகிறது.

