வாய்க்கு ருசியான தின்பண்டங்கள், வீட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை மலிவான விலையில் வாங்குவதற்கு சிங்கப்பூரர்கள் பலர் அதிகம் நாடும் ஒன்று 'பசார் மாலாம்'. அன்றும் இன்றும் தொடர்ந்து நிலைத்து வந்துள்ள இரவுச்சந்தைகளின் வரலாற்றைப் பற்றிய கண்காட்சி, இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து ஆண்டிறுதி வரை நடைபெறுகிறது.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் 'ஹெரிட்டேஜ் ஆன் தி மூவ்' திட்டத்தின்கீழ் 'லேலோங்! லேலோங்! சிங்கப்பூரில் பசார் மாலாம்' என்ற பெயரிலான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவுச்சந்தைகள் எப்படி உருவாகின, காலவோட்டத்தில் எவ்வாறு உருமாறின ஆகியவற்றை ஆராயும் இக்கண்காட்சியில், சந்தைகளில் விற்கப்படும் பலவிதமான பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொதுமக்கள் இதுவரை சந்தைகளில் வாங்கிய பொருள்களும் விற்பனை செய்த பொருள்களும் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
ஜூலை மாதம் முழுவதும் செம்பவாங் நூலகத்திலும், ஆகஸ்ட் மாதம் தோ பாயோ நூலகத்திலும், செப்டம்பர் மாதம் அங் மோ கியோ நூலகத்திலும், அக்டோபர் மாதம் செங்காங் நூலகத்திலும், டிசம்பர் மாதம் ஜூரோங் மேற்கு நூலகத்திலும் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
செய்தி: ஹர்ஷிதா பாலாஜி

