சிங்கப்பூரில் பெரும்பாலான இளையர்கள் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இருப்பினும் தற்போதைய சமூக நியதிகள் மாறிவரும் நிலையில் சிலர் தங்களுக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் பெற்றோரின் வீட்டை விட்டு இளையர்கள் வேறு இடத்திற்குச் செல்வது என்பது பெரியவர் ஆனதற்கான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான ஆசிய சமூகங்களில் அது கலாசார அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
மேலும், அவ்வாறு இளையர்கள் செய்தால் பெற்றோரை அவமதிப்பதாகக்கூட கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் குறிப்பாக, ஒருவருக்குத் திருமணமாகும்வரை அவர் பெற்றோருடன் வசிப்பது வழக்கம்.
2013ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் தங்கள் பெற்றோருடன் வசிக்கும் 34 வயதுக்கும் குறைந்த திருமணமாகாதவர்கள் 97 விழுக்காட்டினராக இருந்தனர்.
இருப்பினும் அண்மைய ஆண்டுகளாக சிங்கப்பூரின் வாடகை கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் உள்ளூர்வாசிகளும் தங்களுக்கென ஓர் இடத்தைத் தேடிக்கொள்கிறார்கள். திருமணமாகாத, 35 வயதுக்குக் குறைந்த சிங்கப்பூரர்கள் தனியாகவோ தங்கள் பெற்றோரைப் பிரிந்தோ வாழ்வது 2015ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டில் இரட்டிப்பாகியது.
உள்ளூர் சொத்துச் சந்தை தளமான 'ப்ரோபர்டிகுரு', கடந்த ஆண்டு நடத்திய ஆய்வுப்படி, 22 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட 10ல் எழுவர் தங்கள் பெற்றோரின் வீட்டிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெற்றோருடன் ஒரே வீட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்காது. விருப்பமானதைச் செய்யும் சுதந்திரமும் இருக்காது என்கின்றனர் சிலர்.
பல்கலைக்கழக தங்குவிடுதிகள், வெளிநாட்டில் படிக்கும் காலத்தில் வாடகைக்குத் தங்கிய அறைகள் என இளையர்கள் சிலர் சுதந்திரத்தை அனுபவித்துவிட்ட நிலையில் மீண்டும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிக்கத் தயங்குவர்.
தனக்காக அனைத்தையும் செய்வதற்கு வீட்டில் ஒருவர் இருக்கும்போது சோம்பலும் சிலருக்குத் தலைகாட்டலாம்.
தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சில இளையர்கள் விரும்புவதும் உண்டு. பெற்றோருக்குப் பிள்ளையாக மட்டுமே இருக்க வேண்டாம் என்று எண்ணி இவர்கள் தங்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகின்றனர்.
இதற்கிடையே, தங்கள் பெற்றோரை விட்டு தூர இருப்பதால் சண்டை சச்சரவுகள் குறைவதாகக் கூறும் இளையரும் உண்டு. அதனால், வெவ்வேறு வீடுகளில் இருப்பதால் உறவு மேம்படுவதுடன் பலநாள் கழித்து நடக்கும் சந்திப்புகளும் இனிமையாக அமைவதாக சிலர் கூறுகின்றனர்.
செய்தி: இணையம்

