ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வதும் நல்ல உணவுப் பழக்கங்கள் இருப்பதும் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு உப்பை உட்கொண்டால் அது மேலும் உதவியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு துளியளவு உப்பை உண்டாலே போதும்.
கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாகக் குறையும். அதனால்தான் உடற்பயிற்சி செய்தவுடன் பலர் மளமளவென்று அதிக அளவில் தண்ணீரை அருந்துவர்.
உடலில் நீரின் அளவு அதிகம் குறையாமல் இருக்க உப்பு உதவுகிறது. சிறுநீர் கழிப்பது, வியர்வை சிந்துவது போன்றவற்றின் மூலம் உடலிலிருந்து அளவுக்கதிகமான நீர் வெளியாவதை உப்பு தவிர்க்கிறது.
தண்ணீரில் சிறிதளவு உப்பைச் சேர்த்துக்கொள்வதும் உடற்பயிற்சி செய்வோருக்குப் பலனளிக்கும். அதன் மூலம் உடலின் ரத்த ஓட்டம் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, உடற்பயிற்சி செய்யும்போது ஒருவர் உடலை அதிகம் வறுத்திக்கொள்ளாமல் இருக்கவும் உப்பு கைகொடுக்கிறது. இதன் மூலம் உடற்பயிற்சி செய்யும்போது ஒருவரின் ஆற்றல் மேம்படும்.
இதனால், உடற்பயிற்சி செய்பவரின் வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் மெருகூட்டப்படுகிறது. இதற்காகவே விளையாட்டாளர்கள் பலர் போட்டிகளில் களமிறங்குவதற்கு முன்பு உப்பை உட்கொள்கின்றனர்.
உடற்பயிற்சி செய்யும்போது உடலின் தசைகள் சோர்வடையும். அப்போது சில வேளைகளில் 'மசல் கிராம்ப்ஸ்' எனப்படும் தசை இறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உப்பினால் உடலின் ரத்த ஓட்டம் மேம்படும்போது இதுபோன்ற தசை இறுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
அதிக உடற்பயிற்சி செய்யும் பெரியவர்களின் ரத்தத்தில் உப்பின் அளவு அதிகம் குறையக்கூடும். 'ஹைப்போனட்ரீமியா' எனும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வும் உடற்பயிற்சிக்கு முன்பு உப்பை உண்பதே.
சிறிதளவு உப்பினால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோரும் உடற்பயிற்சியில் நாட்டம் இருப்போரும் அனுபவிக்கக்கூடிய பலன்களை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி நிறுவனம் விவரித்திருந்தது.

