சிறப்புத் தேவையுடைய சிறார் சராசரியாக இரண்டரை முதல் மூன்று வயதில் மின்னிலக்கச் சாதனங்களுக்கு அறிமுகமாகின்றனர். அவர்களுடைய பெற்றோரில் ஏறக்குறைய பாதிப் பேர், தங்கள் பிள்ளைகள் மின்னிலக்கச் சாதனங்களில் கூடுதல் நேரம் செலவிடுவதாகக் கருதுகின்றனர்.
தேசிய கல்விக் கழகம் மேற்கொண்ட அண்மைய ஆய்வின் முடிவுகள் இவை. சிறப்புத் தேவையுடைய 550 சிறார் பங்கெடுத்த இந்த ஆய்வு, பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டு பிள்ளைகள் மின்னிலக்கச் சாதனங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்பதைக் கண்டறிய முற்பட்டது.
ஆய்வில் பங்கெடுத்த சிறாரில் பெரும்பான்மையினர் (65%), நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்குக் குறைவாக மின்னிலக்கச் சாதனங்களில் நேரத்தைச் செலவிட்டனர். கிட்டத்தட்ட 23 விழுக்காட்டினர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை திரை முன்னால் அமர்ந்திருந்தனர்.
எஞ்சிய 10 விழுக்காட்டினர், வீட்டில் அன்றாடம் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக மின்னிலக்கச் சாதனங்களில் நேரம் செலவிட்டனர்.
மின்னிலக்கச் சாதனத் திரை முன்னால் தங்கள் பிள்ளைகள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த தங்களுக்கு உதவி தேவைப்படுவதாக மூன்றில் ஒரு பங்கு பெற்றோர் கருதினர்.
தொடக்கப்பள்ளி வயதினரான சிறப்புத் தேவைகளுடைய சிறாரிடையே மின்னிலக்க ஊடகப் பயன்பாடு குறித்து இங்கு ஆராயும் முதல் ஆய்வு இது. ஆய்வில் பங்கெடுத்த 550 சிறார், ஆறு முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் 49 தொடக்கப்பள்ளிகளிலும் 13 சிறப்புக் கல்வி பள்ளிகளிலும் பயில்கின்றனர்.

