பொதுவாகவே வயதாக ஆக, நம் நினைவாற்றல் குன்றும் என்பது நம்மில் பலரின் அசைக்கமுடியாத கருத்தாக இருக்கிறது.
இது தவறான ஊகம் என்கிறார் மூளை நரம்பியல் வல்லுநர் ரிச்சர்ட் ரெஸ்டேக். அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான அவர், நினைவாற்றல் குறைவதைத் தவிர்க்கலாம் என்கிறார்.
நினைவாற்றல் பிரச்சினையால் அவதியுற்ற நோயாளிகளுக்கு வழிகாட்டுவதில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த அவர், இதன் தொடர்பில் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
அவர் அண்மையில் வெளியிட்ட நூலின் தலைப்பு, 'த கம்ப்ளீட் கைட் டு மெமரி: த சயின்ஸ் ஆஃப் ஸ்ட்ரென்தனிங் யுவர் மைண்ட்' என்பதாகும்.
இதில் மூளைக்கான பல்வேறு பயிற்சிகள், தூக்கம் தொடர்பான பழக்கங்கள், நினைவாற்றலைத் தூண்டும் உணவுகள் போன்றவற்றைப் பகிர்ந்துள்ளார்.
அறிவு, கவனக் குவிப்பு, சாதனை ஆகியவற்றுடன் தொடர்புடைய நினைவாற்றலை அன்றாடம் வலுப்படுத்துவது அவசியம் என்கிறார் டாக்டர் ரெஸ்டேக்.
முதுமையால் நினைவாற்றல் குறைவதில்லை என்று வாதிடும் அவர், அதனை இழக்கக் காரணமான பத்து நடவடிக்கைகளை 'பாவச் செயல்கள்' என்று குறிப்பிடுகிறார்.
புகழ்பெற்ற உளவியல் வல்லுநர் டேனியல் ஷேக்டர் விவரித்த ஏழு பாவச் செயல்கள் அதாவது, செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருப்பதும் செய்யக்கூடாததைச் செய்வதும் இவற்றில் அடங்கும்.
நிலையற்றதன்மை, தன்னை மறந்து சிந்தனையில் மூழ்குதல், தற்காலிக மறதி, தவறான தகவல் உள்ளீடு உள்ளிட்ட அந்த ஏழு செயல்களுடன் தொழில்நுட்ப ரீதியில் உண்மையைத் திரித்துக் கூறுதல், தொழில்நுட்ப திசைதிருப்பல், மன உளைச்சல் என, டாக்டர் ரெஸ்டேக் மேலும் மூன்று அம்சங்களைச் சேர்த்துள்ளார்.
பொதுவாக மனிதர்கள் நினைவாற்றலைக் கட்டிக்காக்க என்ன செய்யலாம் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
கூடுதல் கவனம் செலுத்துதல்
சில வகை மறதிக்கு, முறையாக நாம் கவனம் செலுத்தாததே காரணம். உண்மையில் இவை நினைவாற்றல் பிரச்சினைகளே அல்ல. சான்றாக, நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தவரின் பெயரை மறந்துவிட்டீர்கள் என்றால் அந்த நேரத்தில் சிலருடன் பேசிக்கொண்டிருந்ததால் அவர் பெயரை சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை என்று பொருள்.
போதிய கவனம் செலுத்தாமை என்பது நினைவாற்றல் சிக்கல்களுக்கான ஆகப் பெரிய காரணம் என்கிறார் டாக்டர் ரெஸ்டேக்.
ஒரு வார்த்தையை படத்துடன் இணைத்து நினைவில் பதிக்க முயலலாம். எடுத்துக்காட்டாக, டாக்டர் கிங் என்பவரை நினைவில் பதித்துக்கொள்ள மருத்துவரின் வெள்ளை அங்கி, தலையில் மகுடம், கையில் செங்கோலுக்குப் பதில் ஸ்டெதஸ்கோப் கருவி என்று அவரது உருவத்தை கற்பனை செய்துகொள்ளலாம்.
அன்றாட நினைவாற்றல் சவால்கள்
வழக்கமான இடைவெளியில் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மளிகைக் கடைக்குச் சென்ற உடனே பொருட் பட்டியலை எடுக்காமல், நினைவில் இருந்தே வேண்டிய பொருள்களை எடுக்க முயலலாம். பின்னர் நீங்கள் எழுதிவந்த பட்டியலுடன் அவற்றை ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம்.
விளையாட்டுகள்
சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
நீங்களாகவே சில விளையாட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர்கள் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் முதல் ஜோ பைடன் வரை எழுத வேண்டும். பிறகு கீழிருந்து மேலாக பைடன் முதல் ரூஸ்வெல்ட் வரை எழுதிப் பழகவேண்டும். அதன் பிறகு ஜனநாயகக் கட்சி அதிபர்கள் பெயரை மட்டும் அல்லது குடியரசுக் கட்சி அதிபர்களை மட்டும் எழுத வேண்டும்.
குறிப்பிட்ட தகவல்களை வெவ்வேறாகப் பட்டியலிட உதவும் இந்த முறை நினைவாற்றலை அதிகரிக்கும்.
நாவல் வாசித்தல்
நாவல் வாசிக்கும் பழக்கம் நினைவாற்றலைத் தக்கவைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக, புனைவு வகை நாவல்களை எடுத்துக்கொண்டால் ஒரு கதாபாத்திரம் மூன்றாம் பக்கத்தில் என்ன செய்தது என்பதை 11ஆம் பக்கம் படிக்கும்போது நினைவில் கொள்வோம். இது வாசகரின் நினைவாற்றலை ஈடுபடுத்தும் நடவடிக்கை என்பதை டாக்டர் ரெஸ்டேக் சுட்டினார்.
தொழில்நுட்பம்... எச்சரிக்கை!
எல்லாத் தகவல்களையும் கைத்தொலைபேசியில் சேமித்து வைக்கும் பழக்கத்தால் நம் மூளையின் செயல்திறன் மங்குகிறது என்று எச்சரிக்கிறார் டாக்டர் ரெஸ்டேக்.
அடுத்த பிரச்சினை, கையில் இருக்கும் வேலையில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்பும் அம்சங்கள் கைத்தொலைபேசியில் அதிகம். நண்பருடன் பேசிக்கொண்டே வீதியில் நடந்து செல்வது, மின்னஞ்சல் படிக்கும்போதே 'நெட்ஃபிளிக்சில்' படம் பார்ப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை அனைத்தும் ஒரு நிகழ்வின் தருணத்தில் கவனமின்றிச் செயல்படத் தூண்டுபவை. நினைவாற்றலுக்கு மிகவும் முக்கியமான கவனத்தை இவை சிதைக்கின்றன.
மனநிலை
உங்களது மனநிலைக்கும் மறதிக்கும் தொடர்புண்டு.
சான்றாக, மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிறைய மறதி ஏற்படக்கூடும். அதிகம் உணர்ச்சிவசப்படுவோருக்கும் இந்தச் சிக்கல் ஏற்படக்கூடும்.
எல்லாவற்றுக்கும் கவலைப்பட வேண்டாம்.
சில வகை மறதிகள் பொதுவாக எல்லாருக்கும் ஏற்படக்கூடியவையே. கூட்ட நெரிசலான இடத்தில் வாகனத்தை எங்கு நிறுத்தினோம் என்று திணறுவது நம்மில் பலருக்கும் அவ்வப்போது நிகழ்வதே. வெளியூர்ப் பயணத்தில் ஹோட்டல் அறை எண்ணை மறப்பதும் இப்படித்தான். ஆனால் உங்கள் வீட்டு முகவரியை மறந்துவிட்டீர்கள் என்பது சற்றுக் கவலைக்குரிய அம்சம். மருத்துவ உதவியை நாடுவது நல்லது என்று இந்த நூலில் டாக்டர் ரெஸ்டேக் ஆலோசனை கூறியுள்ளார்.

