சிங்கப்பூருக்கு கோழி ஏற்றுமதியை மலேசியா நிறுத்திவைத்ததை அடுத்து பயனீட்டாளர்களும் கடைக்காரர்களும் அதிகளவில் கோழிகளை வாங்கிக் குவித்தனர். இருப்பினும், புதிதாக வெட்டப்படும் கோழியின் இறைச்சி, எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்ற கேள்வி பலர் மனதில் எழத் தொடங்கியது.
இப்படி புதிதாக வெட்டப்பட்டதோ, குளிரூட்டப்பட்டதோ, உறைய வைக்கப்பட்டதோ, ஒவ்வொன்றையும் எத்தனை நாள்களுக்கு, எவ்வாறு நாம் வைத்திருக்க முடியும் என்பதைப் பற்றி அறிந்திடுவோம்.
உருக வைக்கப்பட்ட உணவை
மீண்டும் உறைய வைப்பது...
உறைய வைக்கப்பட்ட இறைச்சியையும் கடலுணவையும் வெளியே இட்டு அவை உருகிய பின்னர், மீண்டும் உறைய வைப்பது கூடாது என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு செய்யும்போது உணவின் சுவை பாதிக்கப்படுவதுடன் பாக்டீரியா கிருமி வளரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு நுண்ணுயிரிகள் வளர்வதற்கு 5 முதல் 60 டிகிரி செல்சியஸ் ஏற்றது என்பர்.
பழங்களையும் காய்கறிகளையும் முறையாக வைப்பது...
பழங்களும் காய்கறிகளும் உடனே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட வேண்டும். வாடாமல் இருக்க அவற்றின் மீது சூரிய கதிர்களோ வெப்பமோ நேரடியாகப் படுவதும் தவிர்க்கப்படவேண்டும்.
பழுத்த பழங்களைக் காய்கறிகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் அந்தப் பழுத்த பழங்களிலிருந்து வெளிவரும் ஒருவகை வாயு, பச்சைக் காய்கறிகளின் நிறத்தை மஞ்சளாக்கிவிடும். கடையில் வாங்கும் இறைச்சியை உடனே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் பாக்டீரியா வளர்வதைத் தடுக்கலாம். அத்துடன் ஒவ்வொரு வகை உணவையும் தனித்தனி பெட்டிகளில் இட்டு, அவற்றை மூடி வைத்தால் உணவு மாசுபாட்டைத் தவிர்க்கலாம்.
கடலுணவு வாங்கிய பின்...
கடலுணவை வாங்கியவுடன் வீட்டுக்கு உடனே சென்று அவற்றைச் சுத்தமான நெகிழிப் பைகளிலோ பெட்டிகளிலோ வைத்துவிட்டு குளிர்சாதனப் பெட்டியின் உறைய வைக்கும் பகுதியில் இடவேண்டும்.
பாதுகாப்பான முறையில் உருக வைப்பது...
இறைச்சியையும் கடலுணவையும் பாதுகாப்பான முறையில் உருக வைக்க மூன்று வழிகள் உண்டு என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறுகிறது.
தேவையான உணவுப் பகுதியை குளிர்சாதனப் பெட்டி அல்லது மைக்ரோவேவ் அடுப்பு அல்லது குழாய் தண்ணீரில் இட்டு உருக வைக்கலாம்.
இருப்பினும் மைக்ரோவேவ் அடுப்பில் உணவை உருக வைத்த பிறகு உடனே அதைச் சமைத்திட வேண்டும். ஏனெனில் உணவின் ஒருசில பகுதிகளில் வெப்பம் காரணமாக நுண்ணுயிரிகள் வளரத் தொடங்கலாம்.

