விஞ்ஞானியும் இந்தியாவின் மறைந்த முன்னாள் அதிபருமான டாக்டர் அப்துல் கலாமின் 7வது நினைவுநாளை முன்னிட்டு, அப்துல் கலாம் விஷன் சொஸைட்டி, தேக்கா பகுதியில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது.
வாழுமிடத்தைத் தூய்மையாக்குவோம் எனும் இந்த நிகழ்ச்சி, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆதரவுடன் நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் சங்கரநாதன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பார்.
கேம்பல் லேனில் தொடங்கி, லிட்டில் இந்தியா ஈரச்சந்தை, அதையொட்டிய பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.
தொண்டூழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று ஆதரவு தரும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

