சிங்கப்பூர் சிற்பங்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது மெர்லயன் அல்லது ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்சின் சிற்பங்கள்தான்.
இவற்றுக்கு அப்பாலும் பல்வேறு கலையம்சம் பொருந்திய படைப்புகள் உள்ளூர் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளன.
அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரும் நோக்கில் தேசிய காட்சிக்கூடம் 30 ஆண்டில் முதன்முறையாக ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
'நத்திங் இஸ் ஃபாரெவர்-ரீதிங்கிங் ஸ்கல்ப்சர் இன் சிங்கப்பூர்' எனும் தலைப்பிலான கண்காட்சி நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
இதில் 70க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
சிங்கப்பூர் சிற்பக்கலையின் தாத்தா என்றழைக்கப்படும் இங் எங் டெங், புகழ்பெற்ற சிற்பிகளான டாங் டா வூ, லீ வென் போன்றோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன.
மெர்லயன் சிற்பமோ சர் ஸ்டாம்ஃபர்டு ராஃபிள்சின் சிற்பமோ இதில் இல்லை; ஆனாலும் அவற்றைச் சித்திரிக்கும் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
கலைஞர் ஜிம்மி ஓங்கின் 'சீம்ஸ்ட்ரெஸ் ராஃபிள்ஸ் எஃபிஜிஸ்' எனும் தலைப்பிலான சிற்ப மாதிரிகள், கண்காட்சியின் நுழைவாயிலை அலங்கரிக்கின்றன.
ராஃபிள்ஸ் சிலையின் உடல்பகுதியைச் சித்திரிக்கும் வகையில் பஞ்சு அல்லது செயற்கை நூலிழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் இவை.
அதிகாரம், ஆன்மீகம், உடல்சார்ந்த பொருள்கள், உருவாக்கம்-அழித்தல்-மறு உருவாக்கம் ஆகிய நான்கு கருப்பொருள்களில் இங்கு சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
டோபி காட் எம்ஆர்டி நிலையத்துக்கு வழிவிட்டு ஆர்ச்சர்ட் ரோட்டில் இருந்து சிராங்கூன் சாலைக்கு இடம்பெயர்ந்த ஸ்ரீ சிவன் கோயிலில் இருந்த தெய்வச் சிலைகளை இங்கு காணமுடியும்.
புக்கிட் பிரவுன் கல்லறை வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கலைப்படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
கலைஞர் ஆங் சோங் நியான் பல்வேறு பொருள்களில் தயாரிக்கப்பட்ட மெர்லயன் சிலைகளைச் சேகரித்துள்ளார்.
இவற்றைப் பழைய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளிலும் இணையத்தளங்கள் மூலமாகவும் வாங்கியதாகக் கூறும் இவர், சுங்கை ரோட்டில் முன்னர் செயல்பட்ட 'திருடர் சந்தையிலும்' சிலவற்றை வாங்கியதாகச் சொல்கிறார்.
சிங்கப்பூரில் 1921 முதல் 1956 வரை வேலைபார்த்த இத்தாலியச் சிற்பி ரொடோல்ஃபோ நோலியின் சிற்பங்களையும் கண்காட்சிக்குச் செல்வோர் காணலாம்.
சிற்பி இங் எங் டெங்கின் சமகாலப் படைப்புகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1, செயிண்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் தேசிய காட்சிக்கூடத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.
நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்படும் இந்தக் கண்காட்சியைக் கண்டு மகிழ அனுமதி இலவசம்.

