சிங்கப்பூரின் நட்சத்திர உணவகங்களில் உணவருந்தும் பலரின் கனவு இனி மிகவும் குறைந்த விலையில் நிறைவேற்றப் போகிறது 'ட்ரீட்சூர்' எனும் செயலி.
நட்சத்திர உணவகங்களில் மிஞ்சிய உணவு வீணாவதைத் தடுக்கவும் அதேசமயம் பயனர்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கவும் வழி செய்கிறது இந்தச் செயலி.
நிலையான தீர்வு என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்கிறார் 'ட்ரீட்சூர்' செயலியின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பிர்ஸ்டன் வோங்.
சிங்கப்பூரின் எக்கோர் குழு மற்றும் ஹயட் உணவகங்கள், சிங்கப்பூர் மாரியட் டேங் பிளாசா போன்ற நிறுவனங்கள் இந்த செயலியைப் பயன்படுத்தத் தொடங்கி
உள்ளன.
2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ட்ரீட்சூர்' செயலி, கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
இச்செயலியின் மூலம் கிட்டத்தட்ட
30 டன் உணவு வீணாகாமல் தடுக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், சிங்கப்பூரில் சென்ற ஆண்டு குவிந்த 817,000 டன் உணவுக் கழிவுகளை ஒப்பிடும்போது இந்த அளவு மிகவும் குறைவானதாகும்.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது. இதில், பாதிக்கும் மேற்பட்டவை ஆசிய-பசிபிக் நாடுகளில் வீணடிக்கப்படுகின்றன.
உலகளவில் குவியும் உணவுக்கழிவுகளின் மூலம், எட்டு முதல் 10 விழுக்காடு மீத்தேன் போன்ற சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேறுவதாக ஐநா கூறுகிறது.
எனவே, உலக நாடுகள் பலவும் உணவுக் கழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
மிஞ்சிய உணவை மக்களுக்குக் கொண்டு செல்லும் இதுபோன்ற செயலி ஹாங்காங்கில், சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட 25,000 கிலோ உணவுக்கழிவு தடுக்கப்பட்டது.
பேரங்காடிகளில் விற்கப்படாத உணவை தூக்கி வீசுவதற்கு பிரான்ஸ் தடைவிதித்து உள்ளது. ஸ்பெயினில், உணவுக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.