கவிதை ரசனை, ஆய்வு, படைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சிங்கப்பூர் கவிதை விழா இந்த ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட இந்தப் பன்மொழி தேசிய கவிதை விழாவில் தமிழ் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
காயத்திரி காந்தி
கவிதைகளைக், குறிப்பாக உள்ளூர் கவிதைகளை ஏன் படிக்க வேண்டும் என்ற சிலரின் கேள்விக்கு, அண்மையில் இடம்பெற்ற சிங்கப்பூர் கவிதை விழாவில் பங்கேற்ற இளையர்களின் ஆய்வுப் படைப்புகள் விடையாய் அமைந்தன.
உள்ளூர்க் கவிதைகளைப் படிக்கும்போது சிங்கப்பூர் பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களும் கிடைக்காத பார்வைகளும் புலப்பட்டதை தங்கள் படைப்புகளில் விவரித்தனர், 'நமக்குள் கவிதை' என்னும் இளையர் கவிதை ஆய்வரங்கில் பேசிய அந்த இளையர்கள்.
'நமக்குள் கவிதை' ஆய்வரங்கு சென்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி 'தி ஆர்ட்ஸ் ஹவுசில்' நடைபெற்றது.
ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்ற நான்கு மொழி சிங்கப்பூர் கவிதை விழாவின் ஓர் அங்கமாக இந்த ஆய்வரங்கம் இடம்பெற்றது.
சிங்கப்பூர் கவிதை விழா அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் கவிதை விழாவில் பன்மொழி நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்மொழி நிகழ்ச்சிகளும் பள்ளி வருகைகளும் இடம்பெற்றன.
உள்ளூர் நவீன தமிழ்க் கவிதை நூல்களை விமர்சிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளையர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த ஒரு நூலில் உள்ள கவிதைகளைப் பற்றிய தங்கள் ரசனையையும் பார்வையையும் முன்வைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள்.
இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள் பெருந்தேவி ஸ்ரீநிவாசன், கீதா சுகுமாரன், இசை, சாம்ராஜ் ஆகியோர் அவர்களுக்கு வழிகாட்டினர்.
"இது எனக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது, இது போன்ற ஒரு தமிழ் நிகழ்வில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை. வாசிப்பின் மூலம், கவிதைகளுக்குள் மறைந்திருக்கும் பொருளைக் கண்டறியவும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது," என்றார் தேசிய கல்விக் கழக மாணவியும் கருத்தரங்கில் கட்டுரை படைத்தவருமான ரோஷினி தியாகராஜன்.
பன்மொழித் தொகுப்புகளான, "லவ் அண்ட் லைஃப் அட் தி கேலரி", "பிப்டி ஒன் பிப்டி" ஆகியவற்றில் உள்ள கவிதைகள் பற்றியும் படைப்பாளர்கள் ஆராய்ந்தனர்.
'லவ் அண்ட் லைஃப் அட் தி கேலரி' தொகுப்பில் இடம்பெற்ற போர் பற்றிய இரண்டு கவிதைகளை ஆய்வு செய்த ஜனனி ராமச்சந்திரன், நம் வாழ்நாளில் பார்க்காத சம்பவங்கள் பற்றி இரண்டாம் நிலைச் சான்றுகளாக அக் கவிதைகள் விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
இளையர்களுக்கு வழிகாட்டிய கவிஞர்களில் ஒருவரான சாம்ராஜ், "இதுபோன்ற கவிதை தொகுப்புகளை படிப்பதால் மாணவர்களின் கவிதை ரசனை கூடுகிறது. அவர்களின் அறிவுத்திறன் விரிவடைவதுடன் இலக்கியப் புரிதலும் பார்வையும் மேம்படுகிறது" என்று கூறினார்.
ஆய்வரங்கில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. உலகெங்கிலும் உள்ள தமிழ் இலக்கியக் களம் பற்றிய விரிவான கருத்துப் பரிமாற்றங்களும் பயனுள்ள விவாதங்களும் நடைபெற்றன.
"ஆரோக்கியமான இலக்கிய விமர்சன மரபு நம் சமூகத்திற்கு மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் இளையர்களின் கவிதை ஆர்வத்தையும் கவித்திறனையும் வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்," என்று கூறினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆயிலிஷா மந்திரா.
ஆய்வரங்கில் முன்வைத்த கருத்துகளைக் கொண்டு, மூத்த கவிஞர்களின் வழிநடத்துதலோடு படைப்பாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவர். அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும்.
சிங்கப்பூர் கவிதை விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக நவீன கவிதை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் இசை, சாம்ராஜ் ஆகியோருடன் பங்கேற்பார்களும் இணைந்து கவிதைகள் குறித்து உரையாடினர்.
அண்மைக்கால நவீன தமிழ்க் கவிதைகள் சிலவற்றை வாசித்து அதன் மொழி, போக்குகள், பேசுபொருள், நுணுக்கங்கள், அமைப்பு ஆகியவை பற்றி அதில் பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
மாணவர்களும் பயன்பெற்றனர்
மாணவர்களுக்கு கவிதை பற்றி விளக்கும் பொருட்டு வெளிநாட்டுக் கவிஞர்கள் இருவரும் மேற்கொண்ட பள்ளி வருகைகளும் சிங்கப்பூர் கவிதை விழாவை முன்னிட்டு இடம்பெற்றன.
தேசிய கல்விக் கழகத்தில் தமிழ் பயிற்சி ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடிய கவிஞர் இசை, நவீன கவிதைகளைப் புரிந்துகொள்ள நிறைய கவிதைகளை வாசித்துப் பழக வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
நவீன கவிதைகளில் புதிய போக்கை ஏற்படுத்தியவர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், எல்லா நவீன கவிதைகளையும் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றார்.
வாசகர்களுடன் ஒரே அலை வரிசையில் ஒத்துப்போகும் கவிதைகளை மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றும் இசை குறிப்பிட்டார்.
மேலும், என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளி, யுவபாரதி அனைத்துலகப் பள்ளி ஆகியவற்றில் கவிதைப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
அவற்றில் மாணவர்களுக்கு ஏதுவான எளிய நடையில் கவிதைகள் பற்றி விளக்கினார் கவிஞர் சாம்ராஜ். அத்துடன் மாணவர்கள் கவிதை எழுதப்பழக பயிற்சி பெற்றனர்.
-கூடுதல் செய்தி: மணிகண்டன் சுகுணா, தணிகைவேல் சித்ரா, சித்ரா ரமேஷ்