சிங்கப்பூர் கவிதை விழாவின் ஓர் அங்கமாக நடந்த தேசிய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஜூலை 30ஆம் தேதி லாசால் கலைக் கல்லூரியிலுள்ள, நீ ஆன் கோங்சி நூலகத்தில் நடந்தேறியது.
இவ்வாண்டு ஆங்கிலத்தில் 378 பேர், சீனத்தில் 40 பேர், மலாயில் 32 பேர் மற்றும் தமிழில் 34 பேர் என நான்கு மொழிகளில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 484 பேர் கவிதைகளை எழுதினர். கடந்த ஆண்டைவிட 150க்கும் அதிகமானோர் போட்டியில் கலந்துகொண்டனர்.
10 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கான பிரிவில் 'வகுப்பறை' என்ற கவிதைக்காக அஃபீஃபா அகமது முதல் பரிசையும் 'வாழ்க்கை மலர்' என்ற கவிதைக்காக ஸ்ரீ ஹரிஹர் இரண்டாம் பரிசையும் 'சன்னல் வெளியே பார்த்தபோது' என்ற கவிதைக்காக ஜெனீலா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
15 முதல் 17 வயது வரையிலான இளையர்களுக்கான பிரிவில் 'கடலின் சிகரம்' என்ற கவிதைக்காக ரெமீலா முதல் பரிசையும் 'தொழில்நுட்பம்' என்ற கவிதைக்காக அலீஃப் அகமது இரண்டாம் பரிசையும் 'ஆனந்தம் ஆரம்பம்' என்ற கவிதைக்காக விஷாலினி செல்வராஜ் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
18 வயது முதல் பெரியவர்களுக்கான பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. 'தீயினால் சுட்டாலும்' என்ற கவிதைக்காக பிரியா ஜெயக்குமார் மூன்றாம் பரிசையும் 'விடியல் பறவை' என்ற கவிதைக்காக மில்லத் அகமது மற்றும் 'முன்பிருந்த கணத்தின் மலர்ச்சி' என்ற கவிதைக்காக மோகனப்பிரியா தகுதிப் பரிசையும் பெற்றனர்.
தேசிய கலைகள் மன்றம் மற்றும் கிநோகுனியா நூல்கள் ஆதரவில் பரிசு மற்றும் சான்றிதழ்களைக் கவிதை விழா அமைப்பின் தமிழ்ப் பிரிவு இயக்குநரும் எழுத்தாளருமான கனகலதா வழங்கிச் சிறப்பித்தார். இவ்வாண்டிற்கான போட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
கவிஞர் நெப்போலியனின் மகள்கள் ரெமீலா, ஜெனீலா மற்றும் எழுத்தாளர் மில்லத் அகமதுவின் மகன் அலீஃப் அகமது, மகள் அஃபீஃபா அகமது ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

