விண்டோஸ், மேக், லினக்ஸ் கணினிகளில் கூகல் நிறுவனத்தின் குரோம் இணையத்தள உலாவியைப் (browser) பயன்படுத்துவோர் அதன் ஆக அண்மைய மேம்பாட்டை தரவிறக்கம் செய்யும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு அந்த ஆலோசனையை கடந்த வியாழக்கிழமை அன்று விடுத்தது.
குரோம் இணையத்தள உலாவியில் உள்ள பல்வேறு குறைபாடுகளைக் களை யும் பாதுகாப்பு மேம்பாட்டை கூகல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த 11 குறைபாடுகளில் ஒன்று மிகவும் மோசமானது. அதைக் கொண்டு இணைய ஊடுருவிகள் தற்போதே சாதாரண கணினிகளையும் கருவிகளையும் குறிவைக்கத் தொடங்கி இருக்கலாம் என்று கூகல் கூறியது. குறைபாடுகள் பற்றி அந்த நிறுவனம் மேல்விவரம் வெளியிடவில்லை.
இவ்வேளையில் ஐஃபோன் கைப்பேசிகள், ஐபேட் கைக்கணினிகள், மேக் கணினிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வழிசெய்யும் பாதுகாப்புக் குறைபாடு பற்றி ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
அவசர மென்பொருள் மேம்பாட்டை அது கடந்த புதன்கிழமையும் வியாழக்கிழமையும் வெளியிட்டது.
ஐஃபோன் 6எஸ், ஐபேட் பிரோ, ஐபேட் ஏர் 2, 5வது தலைமுறை ஐபேட், ஐபேட் மினி 4 உள்ளிட்ட பல கருவிகளைக் குறைபாடு பாதித்திருக்கக்கூடும்.
பாதுகாப்புக் குறைபாட்டை இணைய ஊடுருவிகள் இப்போதேகொண்டு பயன் படுத்தி வரக்கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. அனுமதிபெறாத மென்பொருளைப் பயன்படுத்தி, ஐஃபோன், ஐபேட் கருவிகளின் இயங்குதளத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர குறைபாடு அனுமதிக்கிறது.