புதன்கிழமை களநிலைமை
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நிலையை அலசும் பகுதி
பிரசன்னா கிருஷ்ணன்
விறுவிறுப்பிற்குக் காத்துக்கொண்டு இருந்த காற்பந்து ரசிகர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தன கடந்த வார இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்.
நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி சமநிலை காண சிரமப்பட்டது. சென்ற பருவத்தில் இரண்டாவது இடத்தில் முடித்த லிவர்பூல் தத்தளித்தது. மான்செஸ்டர் யுனைடெட், லீட்ஸ் யுனைடெட், நியூகாசல் யுனைடெட், பிரைட்டன், ஃபுல்ஹம் போன்ற அணிகள் எதிர்பாரா விதமாக சிறப்பாக ஆடி தங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தன.
தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றதோடு, இரண்டாவது ஆட்டத்தில் பிரென்ட்ஃபர்ட்டிடம் படுதோல்வி கண்ட மான்செஸ்டர் யுனைடெட், தனது பரம எதிரியான லிவர்பூலை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று பலரின் வாயை அடைத்தது. இது தற்போதைய நிலவரம் மட்டுமே. மீட்சி தொடராவிட்டால் விமர்சனங்கள் மேலும் கடுமையாவது நிச்சயம். அதனால் இதனுடன் மனநிறைவு அடைந்துவிட முடியாது.
எனினும், யுனைடெட்டின் புதிய நிர்வாகி எரிக் டென் ஹாக் சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிடலாம். குழுவின் தன்னம்பிக்கை மீண்டும் வளரக்கூடும்.
சென்ற பருவத்தில் இறுதி நாள் பட்டப் போட்டியில் இருந்த லிவர்பூல், இம்முறை தனது முதல் மூன்று ஆட்டங்களில் ஒன்றைக்கூட வெல்லவில்லை. குழுவின் ஆட்டத்தில் பழைய துடிப்பு இல்லை.
மான்செஸ்டர் சிட்டியைத் திணறச் செய்தது நியூகாசல் யுனைடெட். பொதுவாக சிட்டி முதலில் முன்னிலைக்குச் சென்றால் அதை அசைக்க முடியாது. அப்படியிருந்தும் மீண்டுவந்து 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை பெற்று, வியப்பில் ஆழ்த்தியது நியூகாசல்.
ஆட்டம் 3-3 என்று சமநிலையில் முடிந்தபோதும் தங்களாலும் சிட்டியை வெல்லவிடாமல் செய்யமுடியும் என்ற நம்பிக்கை பிற குழுக்களுக்குப் பிறந்திருக்கலாம்.
ஆயினும், இரண்டு கோல் வித்தியாசத்தில் தோல்வியை நெருங்கியபோதும் அதிலிருந்து மீண்டு வந்தது சிட்டியின் ஆற்றலுக்குச் சான்று.
பிரிமியர் லீக்கின் ஆகச் சிறந்த நான்கு குழுக்களில் ஒன்றாக உருவெடுக்க அதிகம் செலவு செய்து புத்துயிர் பெற்றுள்ளது நியூகாசல். சிட்டிக்கு எதிராக ஆடியதைப்போல் தொடர்ந்து ஆடினால் அக்குழு இலக்கை அடைவது உறுதி.
பருவம் தொடங்கி மூன்று ஆட்டங்களே முடிந்துள்ள இத்தருணத்தில் பிரைட்டன், ஃபுல்ஹம் உள்ளிட்ட குழுக்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடினால்தான் அவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசமுடியும். தற்போதைக்கு அவற்றின் முயற்சியைப் பாராட்டவேண்டும்.
லீட்ஸ் யுனைடெட்டிற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். இருந்தாலும் அக்குழு செல்சியை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
பல பெரிய குழுக்களால் அதிகம் செய்ய இயலாத ஒன்றை லீட்ஸ் சாதித்துக்காட்டியது. யாருக்கும் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதைத் தங்களது செயல்பாட்டின் மூலம் லீட்ஸ் வீரர்கள் மெய்ப்பித்துக்காட்டினர்.
தனது முதல் மூன்று ஆட்டங்களில் ஒன்றை மட்டுமே வென்று உள்ளது செல்சி. சரிவு தொடர்ந்தால் செல்சி நிர்வாகி தாமஸ் டுக்கல் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் வியப்பில்லை.
ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரமாகவிளையாடி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஆர்சனல். எதிரணியின் தற்காப்பு விளையாட்டாளர்களை மிகவும் எளிதாக எதிர்கொண்டு கோல்களைப் போட்டு ஆர்சனல் வெற்றி நடைபோடுகிறது.
அதன் பரம எதிரியான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்திசெய்து வருகிறது. ஆர்சனல் தனது மூன்று ஆட்டங்களிலும் வென்றுள்ளது. ஸ்பர்ஸ் குழு இரண்டில் வென்று, ஒன்றில் சமநிலை கண்டுள்ளது.
பருவம் தொடங்கி மூன்று ஆட்டங்களே முடிந்துள்ளதால் அடுத்து வரும் வாரங்களில் அவை எவ்வளவு சிறப்பாக விளையாடும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. நிலைமை தலைகீழாகவும் மாறலாம்.
லீக்கில் அதிக விறுவிறுப்பு இல்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், அந்நிலை மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.