வேலையிடத்திலோ வீட்டிலோ 'ஒரே களைப்பாக இருக்கிறது' எனச் சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். உடலில் தெம்பு இல்லாமல் எப்படி அன்றைய தினத்தைச் சமாளிக்கப் போகிறோம் என்றுகூட அவர்கள் புலம்புவர். வீட்டை விட்டு வெளியில் அடியெடுத்து வைக்கவும் தயங்குவர். இவ்வகையான சோர்வுக்கு என்னதான் காரணம்?
கொவிட்-19 கொள்ளைநோய்தான் மிகப் பெரிய குற்றவாளி. வீட்டிலேயே கிட்டத்தட்ட ஈராண்டுகளாக முடங்கி, பிறருடன் அதிகத் தொடர்பு இல்லாத நிலையில் வாழ்க்கை திருப்தி அளிக்காததுபோல் தோன்றலாம்.
உணர்வுகளில் மூழ்கி, வாழ்க்கையில் இதுவரை எடுத்த முடிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பி, கடந்த காலத்தை நினைத்து வருந்தி, உறவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியாத ஒரு நிலையில் சிலருக்கு மனச்சோர்வும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தனக்கு வந்திருக்கும் சோர்வு, வாழ்க்கைமுறையின் விளைவாக ஏற்பட்டதா என்பதை முதலில் ஆராயவேண்டும். ஒரு தேக்க நிலை, அல்லது பழகிப்போன அதே பாதையில் தினமும் செல்லும் ஒருவருக்கு வாழ்க்கைமுறைச் சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.
அதற்குமுன் இந்தப் பட்டியலில் இடம்பெறும் கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆமாம்' என்று பதிலளிக்கிறீர்கள் என்று சோதித்துப் பாருங்கள்:
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அதேபோல் நகர்வதாகத் தோன்றுகிறதா?
உங்களின் வேலை, சலிப்புத் தட்டும் வகையில் மனநிறைவை அளிக்காத வண்ணம் உள்ளதா?
உங்கள் வீட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லையா?
நண்பர்களையும் சமூக உறவாடல்களையும் நீங்கள் தவிர்க்க முயல்கிறீர்களா?
மனிதர்களைக் காட்டிலும் கணினி, தொலைக்காட்சித் திரைகளுடன் நீங்கள் செலவழிக்கும் நேரம் அதிகமா?
உங்களின் புத்தாக்க ஆர்வத்தை இழந்துவிட்டீர்களா?
உங்களின் தோல்விகளை நினைத்து நீங்கள் தினமும் ஆவேசப்படுகிறீர்களா?
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல் அல்லது சரியாகச் சாப்பிடாதிருத்தல் இவ்விரண்டில் ஒன்றைச் செய்கிறீர்களா?
உங்களுக்கு முன்பு மகிழ்ச்சிதந்த நடவடிக்கைகள் இப்போது நேர விரயமாகத் தோன்றுகிறதா?
இந்தக் கேள்விகளில் குறைந்தது ஐந்து கேள்விகளுக்காவது நீங்கள் 'ஆமாம்' என்று பதிலளித்திருந்தால், வாழ்க்கைமுறைச் சோர்வில் நீங்கள் சிக்கியிருக்கலாம்.
இதிலிருந்து எப்படி விடுபடுவது? மாற்றம் ஒன்றே வழி. ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபடுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.
எப்போதும் எழும் நேரத்தைவிட முன்னதாகவே எழுந்துவிடுங்கள். இரவில் நேரத்தோடு தூங்கச் செல்லுங்கள். நண்பரைத் தொடர்புகொண்டு சந்தித்துப் பேசுங்கள். திரையரங்கம் அல்லது கலைநிகழ்ச்சிக்குச் செல்லுங்கள்.
சலிப்பூட்டும் அல்லது அடுத்து என்ன நடக்கும் எனக் கணிக்கும் வகையில் உங்களின் நாள் நகராதவாறு புதுப்புது நடவடிக்கைகளை நாடுங்கள்.
இல்லத்தரசிகள் தங்களின் சமையலறையை மாற்றி அமைக்கலாம், இளையர்கள் தங்களின் நண்பர்களுடன் கடற்கரை அழகில் திளைக்கும் ஒரு சுற்றுப்பயணத்திற்குச் செல்லலாம், மாணவர்கள் தாங்கள் படிக்கும் இடத்தை மாற்றலாம். இப்படி சிறு சிறு மாற்றங்கள் செய்து உங்களின் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வாழ்க்கைமுறை மாறும், சோர்வு தணியும்.
செய்தி: இணையம்,
படம்: பிக்சபே

