மாதங்கி இளங்கோவன்
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'சிவகாமியின் சபதம்', செப்டம்பர் 16, 17ஆம் தேதிகளில் புக்கிட் மேராவிலுள்ள கேட்வே அரங்கத்தில் அவாண்ட் நாடகக் குழுவால் மேடையேற்றப்படுகிறது.
'4ஜி' நாடகத்திற்குப் பிறகு மீண்டும் உள்ளூர் நாடகக் கலைஞர்களோடு 'சிவகாமி' நாடகம், திரு க.செல்வாவின் எழுத்திலும் இயக்கத்திலும் உருவெடுத்துள்ளது.
நாடக வடிவத்தில் இந்தகதையை எழுத உதவியுள்ளார் ஸ்ரீ கணேஷ் லக் ஷ்மிநாராயணன்.
புத்தக வடிவில் அமைவதற்கு முன்னர், 'சிவகாமியின் சபதம்' கல்கி பத்திரிகையில் நான்கு பாகங்களாக 1944 முதல் 1946 வரை வெளியிடப்பட்டது.
'சிவகாமியின் சபதம்' கதையின் ஒவ்வொரு பாகமும் முடியும்போது, அடுத்து என்ன நடக்கும் என வாசகர்கள் ஆவலுடன் இருந்த காலம் முடிந்து இன்று அக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்க விரும்பும் ரசிகர் கூட்டம் பெருகிவிட்டது.
காஞ்சியிலிருந்து வந்த பரதநாட்டிய நடனமணியான சிவகாமி, தம் வாழ்க்கையில் அனுபவித்த அவல நிலையை விவரிக்கும் 'சிவகாமியின் சபதம்', இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தபோது எழுதப்பட்டதால் சிவகாமியின் கதாபாத்திரம், இந்திய தேசத்தின் போராட்டங்களையும் பிரதிபலிப்பதாக ஆராயப்பட்டது.
சிவகாமி தம் புனிதமான கலையைக் கொண்டு சாளுக்கிய அரசன் புலிகேசியால் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கப் போராடுவதையொட்டி செல்கின்றது இந்த சிவகாமி சபதத்தின் கதையோட்டம்.
அவாண்ட் நாடகக் குழுவின், 'சிவகாமி' நாடகத்திற்கு மகாகவி பாரதியாரின் பேரனான ராஜ்குமார் பாரதி இசையமைத்ததோடு சங்கீத் நயக் அகாடமி விருது வென்ற கையன் சிங்கின் வரைகலை வடிவமைப்பையும் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலைசிறந்த நடனமணிகளும் இந்த நாடகத்திற்கு நடனம் அமைத்துள்ளனர்.
'சிவகாமி' நாடகத்தின் நுழைவுச்சீட்டுகளைப் பெற சிஸ்டிக் இணையப்பக்கத்தை பொதுமக்கள் அணுகலாம்.
பிள்ளைகள், மூத்தோர், மாணவர்கள், தேசிய சேவையாற்றுபவர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் 30 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன. மற்றவர்கள் $35 கட்டவேண்டும்.

