எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய உலகச் சாதனை ஆங்கில நூலான 'ஐந்து வார்த்தை சிறுகதை', 'சிங்கப்பூரில் சரவணன்', 'மறக்கவியலா அமராவதியின் அமரகாவியம்' ஆகிய மூன்று நூல்களும் கடந்த சனிக்கிழமை மாலை, தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16வது மாடியில் உயிர்மெய் பதிப்பகத்தின் ஏற்பாட்டில், வெளியீடு கண்டன.
சிறப்பு விருந்தினராக வருகையளித்த இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவர் முனைவர் இரா. தினகரன், ஐந்து வார்த்தை சிறுகதை பற்றி பாராட்டிப் பேசினார்.
அதன் பிறகு உயிர்மெய் பதிப்பகம் சார்பில் மூத்த எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு 'இலக்கிய வித்தகி விருது', இலக்கியப் பேச்சாளரும் கல்வியாளருமான முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனுக்கு 'செம்மொழி மாநிதி விருது', பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வனுக்கு 'சேவைச் செம்மல் விருது', இசைக்கவி மதியழகனுக்கு 'மின்னிலக்க ஓவியர் விருது' ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும், உலகச் சாதனை படைத்துள்ள ஐந்து வார்த்தை சிறுகதை நூலுக்கு வாழ்த்துச் செய்தியளித்த அமைப்புகளுக்கு நினைவுப்பரிசுகளும் ஆதரவாளர்களான தேசிய நூலக வாரியம் மற்றும் தமிழ் முரசு நாளிதழுக்கு நன்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.
நூல் வெளியீட்டின் சிறப்பு அம்சமாக, நூல் ஆய்வு விவாதம் ஒன்றை முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையேற்று நடத்தினார்.
உலகச் சாதனை குறும்படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிறைவாக நூலாசிரியர் மில்லத் அகமது நன்றியுரை கூறினார்.
செய்தி: ஏற்பாட்டுக் குழுவினர்