வண்ண ஒளி உமிழும் அலங்கார விளக்குகள், பல வடிவங்களிலான 'லேண்டர்ன்' எனப்படும் கூண்டு விளக்குகள் ஆகியவற்றால் களைகட்டியிருக்கிறது ஜூரோங் ஏரித் தோட்டம்.
இந்த ஆண்டின் இலையுதிர்காலக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் விதமாக 'லைட்ஸ் பை த லேக்' விழாவை நேற்று முன்தினம் ஒளியூட்டு நிகழ்ச்சியின் மூலம் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்தார்.
அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பாரம்பரிய சீன இசைக்கருவிகளோடு மேற்கத்திய இசைக்கருவிகளும் வாசிக்கப்படும் நிகழ்ச்சிகள் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவில் நடைபெறும்.
'ஆக்டிவ் எஸ்ஜி', 'பேஷன் வேவ்' ஆகியவற்றுடன் இணைந்து பொதுமக்களுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தி சாயும் நேரத்தில் வழிகாட்டியுடன் கூடிய நடைப் பயணம், கூண்டு விளக்கு விடுகதைகள் போன்றவற்றில் அவர்கள் பங்கேற்கலாம். அதிபர் சவால் நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெறும் இவ்வாண்டு விழாவில் பல்வேறு கூண்டு விளக்குகளும் தொட்டியில் வளர்க்கப்படும் 'போன்சாய்' மரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் திரட்டப்படும் நிதி அதிபர் சவால் அறநிதிக்கு வழங்கப்படும்.
அன்றாடம் இரவு 7 மணியிலிருந்து 11 மணி வரை ஒரு கருப்பொருளைச் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான கூண்டு விளக்குகள் ஒளியூட்டப்பட்டிருக்கும். காண்பவர் கண்ணைக் கவரும் இத்தகைய 12 விளக்குகள் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை ஜூரோங் ஏரித் தோட்டத்தை அலங்கரிக்கும்.
'ஏ ஸ்மார்ட் மீடியா', மக்கள் கழகம், தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து 'லைட்ஸ் பை த லேக்' விழாவிற்கு தேசியப் பூங்காக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தேசியக் கலை மன்றமும் எஸ்பிஎச் மீடியாவின் சீன ஊடகக் குழுமமும் ஆதரவு வழங்குகின்றன.

