பொன்மணி உதயகுமார்
'சிங்கப்பூர் பிசினஸ் ரிவியூ' சஞ்சிகையின் 40 வயதிற்குக் குறைவான சிறந்த 10 சொத்து முகவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் டாலஸ் ஹசான் (படம்).
தன் இளம் வயதில் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு மாறிய கசப்பான அனுபவம் இவருக்கு உண்டு. கூட்டுத் தொழிலில் இவரது தந்தை எதிர்கொண்ட நிதிச் சிக்கல்களே அதற்குக் காரணம்.
தேசிய சேவை செய்து கொண்டிருந்த டாலசால் அப்போது குடும்பத்திற்குப் பெரிதும் கைகொடுக்க இயலவில்லை. ஆனால், தேசிய சேவைக்குப் பிறகு சொத்துச் சந்தை தொடர்பான பயிற்சியை முடித்து பகுதிநேர சொத்து முகவராகப் பணிபுரியத் தொடங்கினார்.
அப்போது 'ரிச் டெட், புவர் டெட்' எனும் நூலைப் படிக்க நேர்ந்தது. சொத்துச் சந்தையைப் புதிய கோணங்களில் அணுகி தன் வெற்றிக்குப் பாதை வகுத்துத் தந்தது அந்த நூல்தான் என்கிறார் டாலஸ்.
குடும்பத்தின் நான்கு பிள்ளைகளில் மூத்தவரான டாலஸ் தன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஊக்குவித்ததுடன் உதவியும் செய்திருக்கிறார். இளம் வயதில் எதிர்கொண்ட சம்பவங்களின் தாக்கம்தான் தனக்கு உந்துதலாக இருந்ததாக இவர் கூறுகிறார்.
கடந்த இருபது ஆண்டுகளாக சொத்துச் சந்தைத் துறையில் வேலைசெய்யும் டாலஸ், தற்போது 'ஆரஞ்ச்டீ & டை' நிறுவனத்தில் மூத்த மாவட்ட இயக்குனராகப் பணியாற்றுகிறார். இவர் 60 முகவர்களைக் கொண்ட குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
வீடு வாங்குவோருக்குப் பொறுப்பான முறையில் அறிவுரை கூறும்படி தன் குழுவினரிடம் இவர் வலியுறுத்துகிறார். காரணம், வீடு வாங்கும் பரிவர்த்தனையோடு தங்களது வேலை முடிந்து விடுவதாக இவர் கருதவில்லை. வீடு வாங்குவோரின் குடும்பங்களையும் அவர்களது நிதிச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதும் சொத்து முகவர்களின் பொறுப்பு என்றே இவர் கருதுகிறார்.
சென்ற ஆண்டு 400 குடும்பங்கள் புதிய வீட்டில் குடியேற இவரது தலைமையிலான குழு உதவியது.
வாடிக்கையாளர்கள் பலர் நண்பர்களாகப் பழகுவதாகக் கூறிய டாலஸ், பயனாளர்களின் கூடுதல் எதிர்பார்ப்புகளை நேரமின்மையால் தொடர்ந்து நிறைவேற்ற முடிவதில்லை என்றார்.
இந்தத் துறையில் தன்னைத் தனித்துக் காட்டுவது, விடாமுயற்சியும் எதையும் செய்யக்கூடும் என்ற நம்பிக்கையுமே என்று குறிப்பிட்டார்.
"ஒருவர் அடிபட்டுத்தான் வாழ்க்கையில் ஊக்கம் பெற வேண்டும் என்பதில்லை," என்று சொல்லும் டாலஸ், "இடர்களைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் திடமான மனத்துடன் அவற்றை எதிர்கொள்வதே சிறப்பு," என்று கூறினார்.
எந்தச் செயலிலும் ஆக்ககரமாக ஈடுபடுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சொத்துச் சந்தைத் துறையைப் பொறுத்தவரை வானமே எல்லை என்பது டாலசின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தனக்கு மிகப் பெரிய இலக்குகள் இல்லையென்றாலும் தொடர்ந்து தன் பணியின் மூலம் பலரை நல்லமுறையில் ஊக்குவிக்கவும் தன்னைப் போன்றே மற்றவர்களும் வெற்றிபெற வழிவகுக்கவும் முனைந்துள்ளார்.
படம்: டாலஸ் ஹசான்

