உலகம் எங்கும் உள்ள நிறுவன நிர்வாகிகளுக்கு தற்போது பெரும் சவாலாக இருக்கிறது 'குவாயட் குவிட்டிங்' எனப்படும் போக்கு.
கொவிட்-19 பரவலால் வேலையிடங்கள் இயங்கும் முறை மாறியதைப் போல வேலை குறித்த கண்ணோட்டங்களும் மாறின.
அமெரிக்கா போன்ற இடங்களில் பலர் வேலையை விட்டனர். அதைத் தொடர்ந்து வேலையில் குவாயட் குவிட்டிங் எனும் இப்போக்கு தலைதூக்கி உள்ளது.
வேலையில் செய்ய வேண்டியதை மட்டும் செய்துவிட்டு, அதற்கு அப்பால் சிறிதும் முனைப்பு காட்டாமல் இருப்பதுதான் இந்தப் போக்கு.
டிக் டாக் சமூக ஊடகத் தளங்களில் இந்தப் போக்கு பலரிடம், குறிப்பாக இளையர்களிடம் காணப் படுகிறது. இவர்களின் கணக்குகளையும் பதிவுகளையும் பல மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்தப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் பெரும்பாலும் வேலையை விட்டுவிட்டு தற்போது வேறு வேலைக்குச் செல்ல முடியாதவர்கள். இத்தகையோர் வேலை நேரத்தைக் கடந்து கூடுதல் நேரம் செய்வதில்லை.
பணிக்கப்பட்ட வேலைகள் மட்டுமே செய்கின்றனர். கூடுதல் ஊதியம் இல்லாமல் கூடுதல் வேலை பார்க்க மறுக்கின்றனர்.
வேலை நேரத்தைத் தவிர்த்த மற்ற நேரங்களில் இவர்கள் அதன் தொடர்பான மின்னஞ்சல்களையோ சமூக ஊடகத் தகவல் தளங்களையோ பார்ப்பதைத் தவிர்க்கின்றனர்.
வேலை, வாழ்க்கை இல்லை என்றும் அதிகப் பணிச் சுமையால் ஏற்படும் அழுத்தம் வேண்டாம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். கூடுதல் முனைப்பு காட்டுவதால் பயன்களை விட பிரச்சினைகளே அதிகம் என்பதும் இவர்களின் வாதம்.
வேலையில் நிறைவு குறைந்திருப்பதைத்தான் முனைப்பு காட்ட மறுக்கும் இந்தப் பழக்கம் என்று நோட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் நிறுவன நடத்தைத் துறை இணைப் பேராசிரியர் மரியா கொர்டோவிஸ் குறிப்பிட்டார்.
சீன சமூக ஊடகங்களில் தீ போல பரவிய பழக்கம்தான் வேலையில் கூடுதல் முனைப்பு காட்டாத இந்தப் போக்குக்கு வித்திட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
'#டாங்பிங்' எனும் ஹேஷ்டேக் குறி, சீனாவில் சென்ற ஆண்டு பிரபலமானது. பலன்தராத, பொருளற்ற வேலைகளைச் செய்து அலுத்துவிட்டோம் என்ற சீனாவின் இளைய ஊழியர்கள், தங்கள் பிரச்சினைகளுக்கு நீட்டிப் படுத்து ஓய்வு எடுப்பதை வாழ்க்கைத் தீர்வாக முன்வைத்தனர்.
சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து இந்த வழக்கம் குறைந்தாலும் மற்ற நாடுகளில் இது தொற்றிக் கொண்டுள்ளது.
வேலையிடத்துடன் பிணைப்பும் சரியான, வெளிப்படையான உரையாடல்களும் இல்லாததால் வேலையில் கூடுதல் முனைப்பு காட்டாத இப்போக்கு அதிகரித்துள்ளது என்று எழுத்தாளரும் நிறுவன உத்திபூர்வ ஆலோசகருமான சிமோன் அஹுஜா கூறினார்.
ஊழியர்களின் கருத்துகளை மேல் அதிகாரிகள் கேட்டறிந்து அவற்றுக்கு மதிப்பு கொடுத்தால்தான் பிணைப்பு அதிகரிக்கும் என்றார் அவர்.

