கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெற்றால் எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் ஆறு மாநிலங்களில் சட்டசபை கலைக்கப்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
கிளந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலங்கள் பாஸ் கட்சியின் ஆட்சியில் இயங்குகின்றன. அவற்றில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு சட்டசபை கலைக்கப்படமாட்டா என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்கியுதீன் ஹசான் கூறினார்.
'பிஎன்' எனும் பெரிக்கத்தான் நேசியோனால் கூட்டணியில் பாஸ் கட்சி இடம்பெறுகிறது.
மற்றோர் எதிர்க்கட்சிக் கூட்டணியான 'பிஹெச்' எனும் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சியில் இருக்கும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை. எதிர்பார்த்தபடி பொதுத் தேர்தல் இவ்வாண்டு இடம்பெற்றால் அவை அதில் போட்டியிடமாட்டா.
அடுத்த மாதம் ஏழாம் தேதியன்று மலேசியாவின் வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது. அதற்குப் பிறகு பொதுத் தேர்தலை விரைவில் நடத்த பிரதமர் இஸ்மாயில் சாப்ரி திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இப்போது பெரிக்கத்தான் நேசியோனால், பக்கத்தான் ஹரப்பான் ஆகியவற்றின் இந்த முடிவு அதற்கு இடையூறாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும்.
எனினும் அதற்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் வேளையில் தேர்தல் இவ்வாண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

