பேங்காக்: தாய்லாந்து இவ்வாண்டிறுதிக்குள் தனது சுற்றுப் பயண வருவாயை 600 பில்லியனிலிருந்து 700 பில்லியன் பாட் (23 பில்லியன் - 27 பில்லியன் வெள்ளி) வரை அதிகரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அதற்கு வகைசெய்ய இந்திய திருமணக் கொண்டாட்டங்கள் தொடர்பிலான நிகழ்வுகளுக்கு செலவு செய்வோரை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த சுற்றுப்பயண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய திருமணத் துறை பல பில்லியன் டாலர் மதிப்புகொண்டது. கிருமிப் பரவல் சூழல் ஓய்ந்து வருவதைத் தொடர்ந்து அத்துறையில் தேவை அதிகரித்திருக்கலாம்.
அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தாய்லாந்து எண்ணம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுப்பயண ஆணையத்தின் துணை ஆளுநர் சிரிப்பாக்கோர்ன் நியாவ்சமூட் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த வாரம் கூறியிருந்தார்.
கடந்த ஈராண்டுகளில் பல இந்தியர்கள் திருமணம் செய்துகொண்டனர்; ஆனால் தேனிலவுக்கு அவர்களுக்கு சரியான இடங்கள் அமையவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். அத்தகையோரை ஈர்ப்பது தாய்லாந்தின் இலக்கு.

