டென் ஹாக்: ரொனால்டோ யுனைடெட்டில்தான் இருப்பார்
மான்செஸ்டர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டில்தான் இருப்பார் என்று ஆகக் கடைசி நிலவரப்படி அணியின் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறியுள்ளார் (படத்தில் இருவரும்). அதோடு, யுனைடெட் மேலும் சில புதிய விளையாட்டாளர்களை வாங்கப் போவதில்லை என்றும் அவர் சிங்கப்பூர் நேரப்படி நேற்றிரவு சொன்னார்.
ரொனால்டோ யுடைடெட்டிலிருந்து வெளியேற விரும்புவதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் பல பெரிய அணிகளில் சேர முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பல அணிகள் ரொனால்டோவை வாங்க விரும்பவில்லை. உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பது அதற்கான காரணங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டது.
சென்ற பருவம் யுனைடெட் படுமோசமாக விளையாடியபோதும் ரொனால்டோ அதற்கு விதிவிலக்காக இருந்தார். எனினும் அவருக்கும் அணியின் இதர விளையாட்டாளர்களுக்கும் இடையிலான உறவு கசப்பாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரச்சினையில் செல்சி
செளத்ஹேம்டன்: இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தின் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக ஆடாத செல்சி செளத்ஹேம்டனிடம் தோல்வியடைந்துள்ளது. நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் செளத்ஹேம்டன் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டு செல்சியை முன்னுக்கு அனுப்பினார் ரஹீம் ஸ்டெர்லிங். ஆனால் ஐந்தே நிமிடங்களில் செளத்ஹேம்டனின் ரொமெயோ லவியா கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். 45வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் ஆடம் ஆர்ம்ஸ்ட்ரோங்.
இந்த பிரிமியர் லீக் பருவம் தொடங்கி செல்சி ஐந்து ஆட்டங்ளில் ஆடியுள்ளது. அவற்றில் இரண்டில் வென்று இரண்டில் தோல்வியுற்றது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருடனான மற்றோர் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

