மேடை நாடகங்கள், நேரடி நிகழ்ச்சிகளின் தனித்துவம் என்பது, ரத்தமும் சதையுமாக நேரில் தோன்றும் கலைஞர்களின் குரல்கள், பேச்சு, பேச்சுத் தொனி, முகபாவங்கள், உடலசைவுகள், அவற்றின் மூலம் வெளிப்படும் உணர்வுகள் அத்தனையையும் உடனடியாக, ஒரு குழுவாக உள்வாங்க முடிவது.
பல பேருடன் கூட்டாகச் சிரித்து, புருவம் உயர்த்தி - சுருக்கி, 'ச்சு' கொட்டி, வியந்து, மகிழ்ந்து, சலித்து, ஆமோதித்து, மறுத்து நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவது.
இரண்டாண்டுகளுக்கு மேலாக, இப்படி குழுவாக எந்த உணர்வையும் பகிரமுடியாது மூச்சு முட்டிக்கொண்டிருந்த இறுக்கம் மெல்லத் தளர்ந்துள்ள நிலையில், உள்சிந்தனையோ, வெளிச்சிந்தனையோ இன்றி நிகழ்வில் லயித்திருக்க வைத்தது சென்ற வாரம் அரங்கேறிய அல்ஃபியான் சாட் எழுதிய நாடகம்.
'தி டெத் ஆஃப் சிங்கப்பூர் தியேட்டர் எஸ் ஸ்க்ரிப்டட் பாய் தி இன்ஃபொகாம் மீடியா டெவலப்மன்ட் அத்தோரிட்டி ஆஃப் சிங்கப்பூர்' என்பது நாடகத்தின் பெயர்.
கடந்த 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை முகமட் சுல்தான் ரோட்டில் உள்ள அரங்கமாக்கப்பட்டுள்ள முன்னைய சரக்குக் கிடங்கில் நிகழ்வு அரங்கேறியது. தி சப்ஸ்டேஷன் இம்மாதம் நடத்தும் மேடைநாடக விழாவின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
சிங்கப்பூரில் மேடை நாடகத் தணிக்கை குறித்தது இந்த நாடகம்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவருடன் நடக்கும் கற்பனை உரையாடல் பாணியில், இயக்குநர் இர்பான் கஸ்பான் வடிவமைத்திருந்த உரை-நிகழ்த்துக் கலையை பிரபல மேடைக் கலைஞர் ஃபாரா ஓங் படைத்தார்.
19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ காலத்தில் தொடங்கி, தற்போது வரை யிலான தணிக்கைச் சட்டங்கள், விதி முறைகள், அவை செயல் படுத்தப்படும் விதம், தணிக்கை செய்யப்பட்ட நாடகங்கள், அதன் காரணங்கள், தணிக்கைக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள், அவற்றின் பொருள் மயக்கம் என்று அத்தனையையும் ஆதியோடு அந்தமாக எந்தக் கட்டுப்பாடும் இன்றி தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் எழுதித் தீர்த்திருந்தார் அல்ஃபியான் சாட்.
சிங்கப்பூர் தணிக்கையின் வரலாற்றை, ஆவணங்கள், புகைப்படங்கள், முந்தைய அமைச்சர்களான ஓங் பாங் பூன், கோ கெங் சுவீ போன்றவர்களின் பேச்சுகளுடன் பார்வையாளர்களின் சிந்தனைக்கு முன்வைத்திருந்தார்.
'நோ' என்பதின் வெவ்வேறு தொனிகளை விளக்கி அழுத்தமாக நிகழ்வைத் தொடங்கிய ஃபாரா, தணிக்கையின் வெம்மையை வெளிப்படுத்தி உச்சத்தை அடைந்து, கடைசியில் 'நீ உன் வேலையைத்தான் செய்கிறாய், உன்மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை' என்று அதிகாரியின் மீதான மெல்லிய அனுதாப உரையாடலுடன் நலிந்த தொனியில் படைப்பை முடித்தார்.
ஒரு கலைஞனின் மன ஆதங்கத்தின் வெளிப்பாடு என்றாலும் சலிப்பு தட்டாமல் அதை நிகழ்த்தியிருந்தார் ஃபாரா. வெவ்வேறு நிலை அதிகாரிகள், தானியங்கி இயந்திரம், அரசாங்க அறிக்கை, கலைஞர்கள் என பல்வேறு பாத்திரங்களின் மொழிவழக்கையும் தொனியையும் பிசிறு இன்றி மாற்றி மாற்றிப் பேசி மேடையில் பலர் இருப்பதைப் போன்ற மாயையை அவர் ஏற்படுத்தினார்.
நாடகம் தொடங்கும்போது, இங்கே நீங்கள் என விளிப்பது அதிகாரியை. நீங்கள் எல்லாருமே அதிகாரிகளாக உங்களை பாவித்துக் கொள்ள வேண்டும், என்று கூறியதாலோ என்னவோ, பார்வையாளர் களையும் அல்ஃபியான் சாடுகிறாரோ என சில நேரம் தோன்றியது.
தணிக்கை குறித்த வரலாறு, தணிக்கை விதிமுறைகளால் முட்டித்திணறும் ஒரு கலைஞனின் மனம் என்பதற்கு அப்பால் செல்வதற்கு இந்த நாடக எழுத்தில் இடமிருக்கவில்லை. ஆனால் ஃபாராவின் நிகழ்த்துதலும் மேடை அமைப்பும் ஒளி, ஒலி அமைப்பும் பேச்சில் இருந்திராத பலவற்றையும் சொன்னது.
தணிக்கை விதிமுறைகள் குறித்த பகடி, விளக்கக் கோரல்கள், நாடகங்களைப் படிக்கும் அதிகாரியின் உணர்வுநிலை எப்படி இருக்கும், அவர் அழுவாரா, சிரிப்பார, சில வசனங்களைப் படித்து சிலிர்த்திருக்கிறாரா, உள்மனத்தை எழுத்தில் கண்டு திடுக்கிட்டிருப்பாரா போன்ற வினாக்கள் பார்வையாளர்களை உரையில் மேலும் ஈடுபடுத்தியிருக்கலாம்.
உணர்ச்சி ததும்ப, உரக்கப் பேசிக் கத்துவதும் அழுவதும், உடல் அசைவையும் அமைப்பையும் கிண்டல் செய்வதும், அடுக்குமொழி வசனங்களை அள்ளிக்கொட்டுவதுமே நல்ல நடிப்பு என நம்பத்தொடங்கியிருக்கும் நிலையில், சின்ன சின்ன அசைவுகள், மென்மையான பேச்சுகள், ஓர் உரை போன்றவை ஒரு கலையை நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதை ஃபாரா அழகாக எடுத்துக்காட்டியிருந்தார்.
நிகழ்த்து மேடைக்கான ஒளி, ஒலி அமைப்புகளோ, மேடை, காட்சி அமைப்போ இல்லாத சரக்குக் கிடங்கின் அறையை அருமையான நிகழ்த்துக் கலை அரங்காக மாற்றியிருந்தனர். ஃபாராவின் உணர்வு களைக் கச்சிதமாக வெளிப்படுத்தின ஒளியமைப்பும் இசையும். அந்த அறையின் மின்சாரம் கட்டுப்பாடு, அலமாரி கதவுகளைத் திறந்து விடுவதையே ஓர் அரங்கச் செயலாக மாற்றியிருந்த விதம் சிறப்பு.
மேடை என்பதன் பொருளையும் அதன் தாக்கத்தையும் நன்கறிந்த கலைஞர்களால் படைக்கப்பட்ட ஒரு படைப்பை நீண்டநாள்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்ததில் நிறைவு.
-லதா