புதன்கிழமை களநிலைமை
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நிலையை அலசும் பகுதி
பிரசன்னா கிருஷ்ணன்
இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் குழுக்களிடையே அதிகம் போட்டி இருக்கக்கூடும். இதைத்தான் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டங்கள் காண்பித்தன.
தொடர்ந்து நான்கு லீக் ஆட்டங்களை வென்று பட்டியலின் ஐந்தாம் இடத்திற்குத் தாவியது மான்செஸ்டர் யுனைடெட். அதுவும் முதலிடத்தை வகிக்கும் ஆர்சனலை வென்றது சாதாரணமல்ல.
இப்பருவத்தை மோசமாகத் தொடங்கினாலும் படிப்படியாக முன்னேறி லிவர்பூல், ஆர்சனல் இரண்டையும் வென்றுவிட்டது யுனைடெட். விளையாட்டாளர்களை வாங்குவது, யாரைக் களம் இறக்குவது போன்றவற்றில் நிர்வாகி எரிக் டென் ஹாக்கிற்கு முழுச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது முன்னேற்றத்திற்கான முக்கியக் காரணம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பருவத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்த ஆர்சனல் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்பதே யுனைடெட்டிற்கு எதிரான ஆட்டத்தில் தெரியவந்தது. எனினும், ஓர் ஆட்டத்தின் முடிவை வைத்து ஆர்சனல் லீக் கிண்ணத்தை வெல்ல போட்டி போடாது என்று சொல்லமுடியாது. அக்குழு பெரிதும் மேம்பட்டிருப்பதில் சந்தேகம் இல்லை.
பருவத்தின் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றுள்ள லிவர்பூலில் சாடியோ மானே இல்லாத குறை தெரிகிறது. லிவர்பூலிடம் பழைய உத்வேகமும் உற்சாகமும் இல்லை.
லிவர்பூலுடன் ஒப்பிடுகையில் சிட்டி பரவாயில்லை. ஆனால் லீக்கில் பெரிய அளவில் தடுமாறிவந்த ஆஸ்டன் வில்லாவை வெல்ல முடியாதது சில கேள்விகளை எழுப்பியுள்ளன.
நடுவரின் தவற்றால் வில்லா போட்ட இரண்டாவது கோல் அனுமதிக்கப்படவில்லை. தோல்வியிலிருந்து தப்பியது கோல் போட எர்லிங் ஹாலண்டை அதிகம் சார்ந்திருக்கும் சிட்டி.
மாறுபட்ட முன்னிலை ஆட்டக்காரரான ஹாலண்டைத் தடுக்க பல குழுக்கள் சிரமப்படுகின்றன. அதற்கான உத்தி குழுக்களுக்குப் புலப்பட்டால் சிட்டியை எதிர்த்து எப்படி விளையாடும் என்பது தெரியவில்லை.
எனினும், சரியான முன்னிலை வீரர் இல்லாமலேயே கடந்த இரு பருவங்களிலும் சிட்டி லீக் கிண்ணத்தை வென்றதை மறக்கமுடியாது.
நெருக்கடியிலிருந்து தன்னால் மீண்டு வரமுடியும் என்பதை செல்சி காண்பித்துள்ளது. கடந்த வாரங்களில் இது பழைய செல்சி இல்லை என்று சிலர் நினைத்திருக்கலாம். வெஸ்ட் ஹேமிடம் தோல்வியடைந்து கொண்டிருந்தபோது சரியான மாற்று ஆட்டக்காரர்களை அறிமுகப்படுத்தி செல்சியை 2-1 எனும் கோல் கணக்கில் வெல்ல வைத்தார் அதன் நிர்வாகி தாமஸ் டுக்கல்.
செல்சியைக் குறைத்து மதிப்பட முடியாது.
அதிக பரபரப்பின்றி ஆர்சனல், சிட்டி இரண்டுக்கும் ஈடுகொடுத்து விளையாடி வந்துள்ளது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். ஆட்டங்களைக் கச்சிதமாக வெல்லும் உத்திகளை நன்கு அறிந்து செயல்படுகிறார் ஸ்பர்ஸ் நிர்வாகி அன்டோனியோ கோன்டே.
லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ஸ்பர்சும் இரண்டாம் இடத்தை வகிக்கும் சிட்டியும் இந்த வார இறுதியில் மோதுகின்றன. இரு குழுக்களும் இதுவரை தோல்வியடையவில்லை.
இரண்டுக்கும் வெற்றி வாய்ப்புகள் சமமாக உள்ளது.
அதிகம் பேசப்படும் குழுக்களைப் பற்றி கவலைப்படாமல் அபாரமாக விளையாடிவந்துள்ளது நான்காவது இடத்தை வகிக்கும் பிரைட்டன். ஆறே ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரைட்டன் லீக் கிண்ணத்தை வெல்வதற்கோ பட்டியலின் முதல் நான்கு இடங்களில் முடிப்பதற்கோ போட்டி தரும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது.
ஆனால் அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. காரணம், பிரைட்டன் இதுவரை பிரிமியர் லீக் பருவத்தை இவ்வளவு சிறப்பாகத் தொடங்கியதில்லை.
பிரைட்டனைப் போல் பிரென்ட்ஃபர்ட்டும் பெரிய குழுக்களுக்குப் போட்டி தரக்கூடும்.
கடந்த வாரத்தின் பிரிமியர் லீக் ஆட்டங்களில் நடுவர்களும் 'விஏஆர்' எனப்படும் காணொளியின் உதவியுடன் இயங்கும் துணை நடுவர்களும் தவறுகளை இழைத்ததாகப் பல தரப்பினர் கூறினர்.
வெஸ்ட் ஹேம், செல்சிக்கு எதிராகப் போட்ட இரண்டாவது கோலும் நியூகாசல் யுனைடெட் கிறிஸ்டல் பேலசுக்கு எதிராக போட்ட கோலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக வெஸ்ட் ஹேமின் கோல் அனுமதிக்கப்பட்டிருந்தால் அக்குழு செல்சியுடன் மோதிய ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்திருக்கும்.
இவை கடந்த வாரம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நடுவர், துணை நடுவர்களின் முடிவுகளில் இரண்டு மட்டுமே. இந்த விவகாரம் குறித்து பிரிமியர் லீக் நிர்வாகக் குழு ஆராயப்போவதாகத் தெரிவித்தது.
இந்த வாரத்தின் ஆட்டங்களில் நடுவர்கள் மேலும் கவனமாக இயங்கக்கூடும்.
இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் கால் கட்டத்தைக்கூட எட்டவில்லை. இருந்தாலும் ஓரிரு அணிகள் மட்டுமே சிறப்பாக செய்யும் போக்கு இம்முறை மாறுபடலாம் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது.