சர்க்கரை உள்ள சுவை பானங்களும் காப்பியும் தேநீரும் உடலுக்குக் கெடுதி என்று நினைத்து, செயற்கை இனிப்பைப் பயன் படுத்துபவர்கள் உண்மையில் தங்களின் உடலுக்கு நன்மை செய்யவில்லை என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
செயற்கை இனிப்பால் பாதிப்பில்லை என்றும் சர்க்கரையைப் போல அதில் கலோரிகள் இல்லை என்றும் பலரும் நம்பி வந்துள்ளனர். ஆனால் அவை உடல் பருமனை அதிகரிப்பதுடன், மூளையில் கட்டி, புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும் என்று ஏற்கெனவே பல ஆய்வுகள் கூறியுள்ளன.
இப்போது பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, செயற்கை இனிப்பை அதிகம் உட்கொண்டவர்களிடம் இதயநோய் அதிகம் காணப்பட்டதாகக் கூறியது.
செயற்கை இனிப்பை உட்கொள்பவர்களுக்கு வாதநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
ஃபிரான்சைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். இன்சர்ன் நிலையத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 42 ஆகும். அவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் பெண்கள். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் 2009ஆம் ஆண்டுக்கும் 2021க்கும் இடைப்பட்ட அவர்களின் உடல் நலமும் ஆராயப்பட்டது.
ஆய்வு தொடங்கியபோது 37 விழுக்காட்டினர் தாங்கள் செயற்கை இனிப்பை சாப்பிடுவதாகக் கூறினர். அவர்கள் பெரும்பாலும் அதிகம் உடற்பயிற்சி செய்யாதவர்கள். உடல் எடையைக் குறைக்க உணவைக் கட்டுப்படுத்த முயன்றவர்கள்.
பங்கேற்பாளர்களை ஆய்வாளர்கள் கண்காணித்து வந்த 9 ஆண்டுகளில், இதயநோய் அல்லது அதன் தொடர்பான நோய்கள் 1,500க்கும் அதிகமான முறை ஏற்பட்டது. மாரடைப்பு, வாதம், இதயக் குழாய் அடைப்பு, நெஞ்சு வலி போன்றவை அவற்றில் அடங்கும்.
செயற்கை இனிப்பு, சர்க்கரைக்குப் பாதுகாப்பான மாற்று எனக் கூறமுடியாது என்று கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு ஏற்ப இந்த ஆய்வு முடிவுகள் உள்ளதாக முதன்மை ஆய்வாளர் மத்தில்ட் டூவியே கூறினார்.
இருப்பினும் செயற்கை இனிப்பு உட்கொள்வதன் விளைவாகத்தான் இதயநோய் ஏற்படுவதாக ஆய்வு முடிவு உறுதியாகக் கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட வேறோர் ஆய்வு, சுக்ரலோஸ், ஏஸ்ஸல்ஃபேம் பொட்டாசியம், அஸ்பார்டம் போன்ற செயற்கை இனிப்புகளுக்கும் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கண்டறிந்தது.
ஆனால் செயற்கை இனிப்பு, இது போன்ற நோய்களுக்குக் காரணம் என்று இத்தகைய ஆய்வுகள் உறுதிப்பட கூறாததால் அவை குறைகூறப்பட்டு வருகின்றன.

