பெரும்பாலான நாடுகளில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் சம்பவங்கள் 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை குறைந்து வந்தன.
ஆனால் அத்தகைய சம்பவங்கள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ இரட்டிப்பாகும் என்று ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், அண்மையில் அமெரிக்க எலும்பு, தாதுப்பொருள் ஆய்வுச் சங்கத்தில் படைக்கப்பட்டன.
உலக மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில் இடுப்பு எலும்பு முறிவுச் சம்பவங்களும் அதிகமாகும் என்று ஆய்வில் கூறப்பட்டது.
அதுவும் 85 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களிடையே இடுப்பு எலும்பு முறிவு நான்கரை மடங்கு அதிகமாகும் என்றும் குறிப்பாக பெண் களைவிட ஆண்களே பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வு தெரிவித்தது.
பெண்களைவிட ஆண்கள் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட ஓராண்டுக்குள் இறக்கும் அபாயமும் அதிகம் என்றும் கூறப்பட்டது.
இடுப்பு எலும்பு முறிவுக்கு ஓராண்டு கால சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் தற்போது பல நாடுகளில் பாதிக்கும் குறைவானவர்களே ஓராண்டுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஆய்வு கூறியது.
இடுப்பு எலும்பு முறிவைத் தடுக்கவும் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய வழிகளைக் காணவும் அரசாங்கங்களும் மருத்துவத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கு தலைமை ஏற்ற டாக்டர் சிங் சோர்-விங் கூறினார்.

