ஒருவருக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அல்லது மற்றவர்கள் புகைப்பதால் வெளியாகும் புகையைச் சுவாசித்தால் அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஆஸ்துமா எனப்படும் ஈளை நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அண்மைய ஆய்வு முடிவு கூறுகின்றது.
இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை ஐரோப்பிய சுவாச சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வை மேற்கொண்ட அனைத்துலக விஞ்ஞானிகள் குழு, புகைப்பதால் ஏற்படும் தாக்கமும் அதனால் விளையும் மூச்சு சார்ந்த பிரச்சினைகளும் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்குத் தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
"இன்னொருவர் புகைப்பதன் மூலம் வெளியாகும் புகையைச் சிறுவயதில் சுவாசிக்க நேர்ந்தவர்களின் பிள்ளைகள் ஒவ்வாமையில்லா ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் அபாயம், அவ்வாறு புகையைச் சுவாசிக்காதோரின் பிள்ளைகளைக் காட்டிலும் 59% அதிகம் என்பதைக் கண்டறிந்தோம்.
"அத்துடன், புகைப்பழக்கம் இருப்போரின் பிள்ளைகள் அந்நோயால் பாதிக்கப்பட 72% அதிக வாய்ப்புள்ளது," என்று மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருவாட்டி ஜியாசெங்க் லியூ கூறினார்.
ஆய்வின் இணை ஆய்வாளரான டாக்டர் டி புய் கூறுகையில், "புகைபிடிப்பதால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதையும் அப்பழக்கம் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளிடத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எங்களது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன," என்றார்.
புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள், எதிர்மறைத் தாக்கங்கள் குறித்து தங்களது ஆய்வு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பதினைந்து வயதுக்குமுன் புகையைச் சுவாசிக்கும் பெற்றோர் மூலமாக அவர்களின் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் ஒவ்வாமையில்லா ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்றும் அவர் சொன்னார்.
வளர்ச்சி சார்ந்த மாற்றங்களை மாற்றியமைக்கும் ஆற்றலையும் புகைப்பழக்கம் கொண்டுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிட்டது. எதிர்காலத் தலைமுறையினரிடத்தில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிக்க அதுவே முக்கியக் காரணமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

