வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வரவேற்கும் அதேவேளையில், செந்தோசா தீவுக்கு சிங்கப்பூரர்களும் தொடர்ந்து வந்துசெல்வதை செந்தோசா மேம்பாட்டுக் கழகம் விரும்புகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் வரை உள்ளூர்வாசிகள் 9.4 மில்லியன் பேர் செந்தேசாவுக்கு சென்றுவந்தனர். அத்தீவின் 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே ஆக அதிக எண்ணிக்கையாகும்.
ஒப்புநோக்க, 2020 ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 8.6 மில்லியன் உள்ளூர்வாசிகள் செந்தேசாவுக்கு சென்றுவந்தனர்.
கொவிட்-19க்கு முந்தைய சூழலில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 19 மில்லியன் பேர் செந்தேசாவுக்கு சென்றுவந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் வெளிநாட்டுப் பயணிகள் ஆவர்.
சிங்கப்பூரில் தற்போது சுற்றுப்பயணத்துறை மீட்சியடைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் 728,744 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தோனீசியா, இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுப்பயணிகள் இங்கு அதிகம் வந்துசென்றனர்.
இவ்வாண்டு ஏப்ரலில் இருந்து எல்லைக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கூடுதலான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து சென்றாலும், செந்தோசா தீவுக்கு வருகை அளித்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இன்னும் உள்ளூர்வாசிகளே ஆவர்.
உள்ளூர்வாசிகளையும் சுற்றுப்பயணிகளையும் செந்தோசாவுக்கு தொடர்ந்து ஈர்க்க, வரும் ஆண்டுகளில் மேலும் பல வசதிகளைத் தொடங்க செந்தோசா மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டு வருகிறது.
உலகளவில் போட்டித்தன்மையுடன் விளங்க புத்தாக்கத்துடன் இருந்துவரும் அதேவேளையில் சிங்கப்பூரர்களின் கவனத்தையும் தொடர்ந்து பெற்றிருக்க செந்தோசா விரும்புகிறது.
"செந்தோசா தீவுக்கு சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வந்துசெல்ல நாங்கள் விரும்புகிறோம். அதுவே எங்களுக்கான சவால்," என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகி தியென் குவீ எங் சொன்னார்.

