கிருமிப் பரவலால் 2020ஆம், 2021ஆம் ஆண்டுகளில் பயணங்கள் முடங்கி இருந்த காலகட்டத்தில், சிங்கப்பூரர் ஒருவர் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதுவும் ஒருமுறைகூட கொவிட்-19 கிருமி தொற்றாமல் இதைச் சாதித்தார்.
விசா அனுமதிக்கு விண்ணப்பித்தல், கொவிட்-19 தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தல், பிசிஆர் பரிசோதனைகளைச் செய்தல் என 27 வயது ஜேஷுவா சோ, அந்த ஈராண்டுகளில் கடந்த தடங்கல்கள் ஏராளம்.
திரு சோ, நான்கு நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். தற்போது புதிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நாடுகள் தங்கள் எல்லைகளை மூடத் தொடங்கிய நேரத்தில் திரு சோ, ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள இஸ்ரேல் சென்றார். மாநாட்டுக்கு வரவேண்டிய பாதிப் பேர் வரவில்லை.
தாம் ஏற்கெனவே திட்டமிட்டபடி அங்கிருந்து சுவீடனுக்கும் நார்வேயுக்கும் சென்றார் திரு சோ.
அதே பிப்ரவரியில் தமது நிறுவனப் பணிகளுக்காக மியன்மாருக்குச் சென்றார் திரு சோ. விமானப் பயணங்கள் குறைந்ததால் இரண்டு வாரப் பயணம் நான்கு மாதங்களாக நீண்டது. மியன்மாரில் கொவிட்-19 காரணமாக திரு சோ மூன்று வாரங்களுக்குத் தனிமைப் படுத்தப்பட்டார்.
2020ஆம் ஆண்டு மீண்டும் நவம்பரில் பணி நிமித்தமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட திரு சோ, அங்கிருந்து ஸிம்பாப்வே, தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எகிப்துக்கும் சுற்றுப்பயணம் செய்தார். குற்றவாளிகளோ கிருமியோ தம்மை அண்டவில்லை என்றார் அவர்.
இவற்றைத் தவிர, ஸ்பெயின், செர்பியா, எஸ்டோனியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், மத்திய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளில் சென்றுவிட்டார்.
தமது தற்போதைய வேலையில், தாம் பயணிக்கும் இடங்களிலிருந்து வேலை செய்ய முடிவதால் தொடர் பயணங்கள் சாத்தியமாவதாக திரு சோ கூறினார்.
கூட்ட நெரிசல் இல்லாத, பண்பாட்டுச் செறிவுள்ள, பாதுகாப்பான, விலைக் கட்டுப்படியான நாடுகளே பயணம் செய்வதற்குச் சிறந்த நாடுகள் என்ற திரு சோ, எஸ்டோனியாதான் தமக்குப் பிடித்த அத்தகைய நாடு என்று குறிப்பிட்டார்.
விவேகத்துடன் செயல்பட்டால், எவரும் குறைந்த செலவில் ஊர் ஊராக பயணம் செய்யலாம் என்றார் திரு சோ.