பொன்மணி உதயகுமார்
உள்நாட்டு, வெளியுறவு சவால்கள் குறித்து அண்மையில் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பேசினார். சிங்கப்பூரின் வருங்கால வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு, சிங்கப்பூர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் பற்றி இளையர்களுக்குப் புரியும் வகையில் விளக்கினார் அமைச்சர்.
சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் வருங்காலத்தில் மூப்படையும் சமூகத்தினர் எண்ணிக்கை கூடுவதன் சவால்களைப் பற்றிப் பேசினார்.
குடும்ப வாழ்க்கை...
சிங்கப்பூரின் விலைவாசியையும் போட்டித்தன்மைமிக்க வேலைகளையும் கருத்தில் கொள்ளும்போது வருங்காலத்தில் தனக்கென ஒரு குடும்பம் வேண்டாத நிலையும் ஏற்படலாம் என்று இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் விஷால் பவன், 23 கூறினார். தமது வாழ்க்கைத்தொழில், மனநலன், சமூக நலன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் இவர், திருமணம், குடும்பம் போன்றவற்றுக்குச் சரிசமமாக நேரத்தை ஒதுக்க இயலாது என்கிறார்.
தன் போன்ற இளையர்கள் எதிர்காலத்தில் குழந்தை பெறுவதற்கு முன்னுரிமை வழங்க விரும்பாததற்கு இவையே காரணம் எனக் கருதுகிறார். அதிகரிக்கும் விலைவாசியையும் கருத வேண்டும் என்றார்.
போதைப்பொருளும்
மரண தண்டனையும்...
மரண தண்டனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது சிங்கப்பூர் ஏன் அச்சட்டத்தை இன்றும் அமல்படுத்தி வருகிறது என்று புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் சண்முகம் விளக்கினார்.
சட்டம் மாற்றப்பட்டால் அது போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துவிடும் என்றார். மக்கள் நலன் கருதியே இந்தச் சட்டத்தில் மாற்றம் ஏதும் கொண்டு வரப்படவில்லை என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் பிரச்சினை அதிகம் இல்லை என்று கருதும் சீலன் தினகரன், 24, மரண தண்டனை குறித்து அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். மற்ற நாடுகளில் சில போதைப்பொருள்களின் புழக்கம் குற்றமாகக் கருதப்படாததால் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தற்போதைய சட்டங்களில் மாற்றம் கூடாது என்றார் அவர்.
பாதுகாப்புமிக்க சூழல்...
சிங்கப்பூரில் குற்ற எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன் பாதுகாப்பும் உள்ளதை எண்ணித் தான் மனநிறைவு கொள்வதாக இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் சின்னதுரை தங்கவேலு, 22, கூறுகிறார். இரவு நேரங்களில்கூட மக்கள் தனியாக நடந்து செல்லப் பயப்படுவதில்லை என்றும் மற்ற மேற்கத்திய நாடுகளில்கூட இதுபோன்ற பாதுகாப்பு சுதந்திரம் கிடைப்பதில்லை என்பதையும் அமைச்சரின் உரை வலியுறுத்தியதாக இவர் சொன்னார்.
வெளிநாட்டுத் திறனாளர்கள்...
வெளிநாட்டுத் திறன்களை ஈர்க்க சிங்கப்பூர் ஏன் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று விளக்கிய அமைச்சர், வெளிநாட்டுத் திறன்களை மேல்நிலை நிர்வாக வேலைகளில் அமர்த்தினால்தான் நடுநிலை நிர்வாக வேலைகளுக்கு சிங்கப்பூரர்களின் தேவை அதிகரிக்கும் என்றார். விரைவில் பட்டம் பெறவிருக்கும் பல்கலைக்கழக மாணவி சஞ்ஜனா சுரேஷ், 22, கொவிட்-19 கொள்ளைநோயால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது கவலை அளிக்கிறது என்றார்.
மின்னியல் மின்னணுப் பொறியியல் துறையில் பயிலும் இவர், தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்கு அதிகமான பொறியியல் துறை பட்டதாரிகள் முன்வருவர் என்பதால் போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும் என்றார். பட்டம் பெறும்முன் தன்னை மேலும் எவ்வழிகளில் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார் சஞ்ஜனா.
பட்டதாரிகளுக்குச் சவால்...
அமைச்சர் கூறிய கருத்துகளைப் பற்றி கருத்துரைத்த பொருளியல் துறை பட்டதாரி திவ்யாதாரணி லக்ஷ்மணன், 23, வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு சிங்கப்பூரில் வேலை அளிக்கப்படுவதால் தன்னைப் போல் வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரிகள் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள் என்று கருதுகிறார்.
வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு வேலை அளிப்பதன் நோக்கத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தாலும் அனைத்து நிலை வேலையிலும் அவர்கள் அமர்த்தப்படுவதால் உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்பது இவர் கருத்து.