டெங்கியால் பாதிக்கப்படும்போது ஒருவரின் உடலிலுள்ள 'பிளேட்லட்டுகள்' (platelets) குறையும். டெங்கியைத் தவிர, பல சுகாதாரப் பிரச்சினைகளின்போதும் அவை குறையக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிளேட்லட்டுகள் என்றால் என்ன என்பதை அறிந்திடுவோம். எலும்பு மஜ்ஜையில் விரவிக் கிடக்கும் மிகச் சிறிய ரத்த அணுக்களே இவை. காயம் ஏற்படும்போது ரத்தத்தை இவை உறைய வைக்கும்.
அதனால்தான், கையில் வெட்டுக் காயம் இருந்தால் அதிலிருந்து ரத்தம் வழிவதை அடுத்து ஓரிரு நிமிடங்களில் ரத்தக்கசிவு தானாக நின்றுபோகும். இதற்கு பிளேட்லட்டுகளே காரணம். அதிகப்படியான ரத்தம் உடலிலிருந்து வெளியேறி நாம் உயிரிழப்பதை அவை தடுக்கின்றன.
ஆரோக்கியமான ஒரு நபரின் உடலில் 100,000க்கும் மேற்பட்ட பிளேட்லட்டுகள் இருக்கவேண்டும். இருப்பினும் டெங்கி, புற்றுநோய், ரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்படும் ஒருவரின் உடலில் இந்த அளவு குறையலாம்.
20,000க்கும் குறைவாக பிளேட்லட் அளவு இருந்தால் அது மிக ஆபத்தான நிலையாகும்.
இந்நிலையில், இயற்கையான வழிகளில் உடலின் பிளேட்லட் அளவை அதிகமாக்கும் வழிகளை நிபுணர்கள் கூறுகின்றனர்.
விலங்குவழி கிடைக்கும் புரதம்
தேவையான பிளேட்லட் அளவைப் பெறுவதற்கு உடலில் வைட்டமின் 'B12' தேவை. முட்டை, ஈரல், கடலுணவு போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமுள்ளது. ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, 'B12' வைட்டமின் முக்கியப் பங்காற்றுகிறது.
இளநீர்
டெங்கி நோயாளிகள் இளநீர் குடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்க நீங்கள் கேட்டிருக்கலாம். இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு.
இளநீரை அடிக்கடி குடிப்பதால் நம் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் 'ஹேமோகுளோபின்' பலனடையும் என்று 2019ஆம் ஆண்டில் வெளிவந்த தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வு கூறுகிறது. பிளேட்லட்டுகள் கணிசமான அளவு அதிகரித்ததாகவும் ஆய்வு கூறிற்று.
பப்பாளி இலைச் சாறு
பிளேட்லட்டுகளை அதிகரிக்கச் செய்யும் பாட்டி வைத்தியம் என இதனைக் குறிப்பிடுவர். டெங்கியால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேரில் பப்பாளி இலைச் சாறுடைய மருந்தும் வழக்கமான டெங்கி சிகிச்சையும் பாதி பேருக்கு வழங்கப்பட்டன.
எஞ்சிய 200 பேரைக் காட்டிலும் பப்பாளி மருந்து உட்கொண்டோருக்கு பாதிப்பு குறைவாக இருந்ததுடன் ரத்த மாற்றமும் தேவைப்படவில்லை என்று ஆய்வின்வழி கண்டறியப்பட்டது.
'கிலோய்' கொடியும்
பெர்ரி பழங்களும்
சீந்தில் என்ற மரங்களில் படரும் ஒருவித மூலிகையை 'கிலோய்' என்றழைப்பர். இதன் இதய வடிவிலான இலைகளிலிருந்து பெறப்படும் சாறு, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள், ஹேமோகுளோபின் ஆகியவற்றுக்குப் பயனளிப்பதாக 'பப்மெட் செண்ட்ரல்' வெளியிட்ட 2010ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், 'கிலோய்' கொடியின் பகுதிகள் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
பெர்ரி பழங்களைச் சாப்பிட்டு வந்தால் பிளேட்லட் செயல்பாடு, ரத்த அழுத்தம், கொழுப்பளவு ஆகியவற்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதாக தேசிய மருத்துவ நூலக ஆய்வு ஒன்றும் கூறுகிறது.
இதயம் தொடர்பான நோய்களையும் பெர்ரி பழங்கள் தடுக்க உதவுவதாக ஆய்வு கூறுகிறது.

