செலவுகளைத் திட்டமிடுவது இன்றைய சூழலில் மிகவும் முக்கியம். உங்கள் வரவு செலவுத் திட்டம், தவறான முடிவுகளையும் விரும்பத்தகாத விளைவுகளையும் தவிர்க்க உதவும். இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி பெருகும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகரிக்கும் வாழ்க்கைக் செல வினம், பொருளியல் நெருக்கடி பற்றிய அச்சம் போன்றவற்றை எதிர்நோக்கும் சூழலில் கையில் உள்ள பணம் பற்றிய கவலையும் கலக்கமம் பலருக்கும் ஏற்படுவது ஆச்சரியம் இல்லை.
சிங்கப்பூர் ஆண்களில் பாதிப் பேரின் மன அழுத்தத்துக்கு நிதி நிலவரமே ஆகப் பெரிய காரணம் என்று டிரேவலோகா நிறுவனம் கடந்தாண்டு நடத்திய கருத்தாய்வில் தெரிய வந்தது. பணம் பற்றிய கவலை சிங்கப்பூரர்களைச் சூழ்ந்துள்ளது என்பதை இதுபோன்ற பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும் கடன் தொல்லை நம் உற்றார் உறவினரின் இறப்பைவிட நம் மனத்தை கலங்கச் செய்கிறது.
'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற அருணாசலக் கவிராயரின் வரிகளைப் பலர் நினைவுகூரலாம்.
பணம் பற்றிய கவலை மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியது. அது குடும்ப உறவைகளையும் உடல்நலத்தையும் சிதைக்கவல்லது.
பணத்தில் நமது சுயஅடையாளமும் தன்மதிப்பும் பின்னப்பட்டுள்ளது. கையில் பணம் இருந்தால் குடும்பத்தைப் பாதுகாக்கிறோம், அல்லது சொந்தக் காலில் நிற்கிறோம் என்ற நிறைவு உண்டாகும்.
ஆனால் போதிய பணமில்லை என்ற மனத் தடுமாற்றம், நம்மைக் கையறு நிலையில் வைக்கும், ஊக்கத்தைக் குறைக்கும். நமது சுயகௌரவம் பாதிக்கப்படும்.
ஆனால் கையிருப்பு பற்றிய கலக்கத்தைக் குறைக்க, இப்போதே ஓர் எளிய வழியை மேற்கொள்ளலாம். முதலில் நாம் நம் வரவு செலவைத் திட்டமிட்டாலே கலக்கம் குறைந்து மனத்தில் நிம்மதி பரவத் தொடங்கும்.
வரவுசெலவுகளைத் திட்ட மிடும்போது நாம் 'ஸ்மார்ட்' முறையைக் கையாள வேண்டும் என்று நிதி நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதாவது குறிப்பிட்ட, கணக்கிடக்கூடிய, தங்களால் எட்டமுடிகிற, தங்களுக்கு ஏற்ற, காலவரையறை உள்ள குறிக்கோள்களை உருவாக்க இந்த ஸ்மார்ட் முறை உதவி செய்கிறது.
தங்களுக்கு முக்கியமான இலக்குகளைக் கண்டுகொள்ளவும் அவற்றை அடைவதற்குச் செயலில் இறங்கவும் இந்த முறை கைகொடுக்கிறது.
அதனால் இலக்குகளை எட்டும் சாத்தியம் அதிகமாகிறது. முறையான திட்டம் இருப்பதால் மனத்தில் ஊக்கம் அதிகமாகிறது.
மேலும், செலவுகளைக் கணக்கிட்டு தொடர்ந்து கண்காணித்து வரும்போது, நிதி இருப்பில் ஏற்படும் முன்னேற்றம் கண்கூடாகத் தெரியும். இதனால் மனச் சோர்வு குறையும். நிலைமை நம் கட்டுக்குள் உள்ளது என்ற எண்ணம் தோன்றும்.
மேலும் பணம் எங்கெங்கெல்லாம் செலவாகிறது என்று தெரி வதுடன், கணக்குகளைப் பார்க்கும்போதே ஊக்கமும் தன்னுரிமை உணர்வும் கூடும் என்று கூறப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம்: வழிகள்
முதலில் வரவுக் கணக்கை எழுத வேண்டும். அடுத்ததாக பணம் எங்கே செலவாகிறது என்பதை எழுதிக் கணக்கிட வேண்டும். பொதுவாகவே நமது மனக் கணக்கைவிட எழுதிவைத்துப் பார்க்கும்போது உண்மையான செலவுக்கணக்கு அதிகமாக இருக்கும். அதனால் கட்டண ரசீதுகள், செலவு செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி எழுதி வைப்பது முக்கியம்.
கடன் பற்று அட்டை, வங்கிக் கணக்கு அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யும் செலவுகளின் விவரத்தை இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்து, எந்தெந்த அம்சங்களில் எவ்வளவு செலவு ஆகும் என்பதை அடையாளம் காண வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது, குடி யிருப்பு, தண்ணீர் மின்சாரக் கட்டணங்கள், காப்புறுதி, போக்குவரத்து, உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு ஆகும் செலவை மதிப்பிட வேண்டும்.
அத்துடன் சேமிப்புக்கு ஒரு தொகை ஒதுக்க வேண்டும். நாம் போடும் உத்தேச செலவுக் கணக்கும் சேமிப்புத் தொகையும் நமது வாழ்க்கை முறைக்கும் உண்மை நிலவரத்துக்கும் ஒத்துப்போகிற இயல்பான தொகையாக இருப்பது முக்கியம்.
அவசிய செலவுகள், தேவைப்பட்டால் குறைத்துக்கொள்ளக் கூடிய செலவுகள், நீண்டகால இலக்குகள் என்று செலவுகளை வகைப் படுத்துவது பலன்தரலாம் என்று ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து, செலவுகளைத் தொடர்ந்து குறித்துவைத்துக் கொள்வது மிக முக்கியம். எந்தப் பிரிவில் எவ்வளவு செலவாகிறது என்று தெரியவரும். நீங்கள் உருவாக்கியுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கு ஏற்றபடி செலவுகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொண்டு செலவுகளையும் உங்கள் திட்டத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
செலவுகளைக் கண்காணித்துக் குறித்து வைக்க இன்று இணையத்தில் பல எளிமையான செயலிகள் உள்ளன. 'மின்ட்', 'ஸ்பெண்டி', 'வாலி', 'பிளேனர்பீ' போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். அல்லது எழுதியும் வைக்கலாம்.
தினமும் எழுதும் அல்லது குறிக்கும் செலவுக் கணக்கைப் பார்க்கும்போது, செலவுப் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள வழிகள் புலப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இறுதியாக செலவுகளைத் தொடர்ந்து கணக்கிடும்போது, பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம் என்று நம்மை நாமே பாராட்டி ஊக்கப்படுத்திக்கொள்வது முக்கியம்.
படிப்படியான முன்னேற்றம் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நிபுணர்கள் ஊக்குவிக்கின்றனர்.