நீங்கள் வாகனமோட்டி என்றால் உங்கள் அடுத்த தாய்லந்து பயணத்தின்போது, நீங்களே வாகனத்தைச் செலுத்திச் சுற்றிப் பார்ப்பது பற்றி பரிசீலிக்கலாம்.
தாய்லாந்து சாலைகள் ஆபத்தானவை, பேங்காக், சியாங் மாய் போன்ற நகரங்களில் போக்குவரத்து நரகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால் நகரங்களுக்கு அப்பாற்பட்டு தாய்லாந்தின் மற்ற பகுதிகள் வாகனமோட்டுவதற்கு பாதுகாப்பானவை என்றும் வாகனமோட்டுவது வசதியானதும்கூட என்றும் செய்தியாளர் ரோனன் ஓ' கானல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் கூறியுள்ளார். பல ஆண்டுகள் தாய்லாந்தில் வசித்த அவர், அங்கு வாகனமோட்டிச் சுற்றிப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நகரங்களுக்கு வெளியே தாண்டிச் செல்லும்போது தாய்லாந்தின் அழகு வியக்க வைக்கும். அதன் கடற்கரையையும் தேசிய பூங்காக்களையும் வடக்கில் உள்ள மலைப்பகுதிகளையும் முழுமையாக ரசிக்க வைக்கும் என்றார் ரோனன்.
தாய்லாந்தில் வாகனம் ஓட்டுவதற்கு சிங்கப்பூரின் வாகன உரிமச் சான்றிதழும் அனைத்துலக வாகனமோட்டும் சான்றிதழும் இருக்க வேண்டும்.
பின்னர் உங்கள் வாகனப் பயணத்தைத் தொடங்கும் இடத்தில் உள்ள கார் வாடகை முகமைகளைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும். பெரிய நிறுவனங்கள்தான் சிறந்தவை என்றாகிவிடாது. சிறிய நிறுவனங்களும் நல்ல பயண அனுபவத்தைக் கொடுக்கும். அதனால் வாடிக்கையாளர்கள் இணையத்தில் பதிவிடும் கருத்துகளைப் படித்துவிட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரோனன் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு கருதி டொயோட்டா ஃபோர்ரன்னர் போன்ற பெரிய காரை வாடகைக்கு எடுக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். நாள்வாடகையும் காப்புறுதியும் 60 வெள்ளிக்குள் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். டாக்சி எடுப்பதைவிட இது பல நேரங்களில் பணத்தை மிச்சப்படுத்தும் என்கிறார் ரோனன்.
கரடுமுரடாகவும் ஒதுக்குப்புறமாகவும் இல்லாது வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு ஏற்ற சீரான சாலைகள் தாய்லாந்தில் உண்டு என்று இவர் கூறுகிறார்.
சுயமாக வாகனமோட்டிச் செல்லும்போது சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் இடங் களைத் தவிர்த்துவிட்டு, பல தனித்துவமான, இனிய அனுபவங்களைத் தரும் இடங்களுக்குப் போக முடியும்.
மே ஹோங் சொன் வளையப் பாதை
அவர் பரிந்துரை செய்யும் இடங்களில் ஒன்று மே ஹோங் சொன் வளையப் பாதையாகும். தாய்லாந்தின் வடக்கில் உள்ள சியாங் மாயில் தொடங்கி, அங்கேயே இந்தச் சுற்றுப்பயணத்தை முடிக்கலாம். சுமார் 600 கிலோமீட்டர் தொலைவுள்ள இப்பாதை மிகவும் பிரபலமாகும். தாய்லாந்தின் வடக்கில் உள்ள மலைகள், மிகப் பெரும் குகைகள், மலைவாழ் கிராமங்கள், தேயிலைத் தோட்டங்கள், மே ஹோங் சொன் போன்ற அழகிய ஊர்கள் வழியாக இப்பாதையில் செல்லலாம்.
இயற்கை எழில் நிறைந்த இப்பாதை நீண்ட, வளைவான சாலைகள் கொண்டது. இருப்பினும், அவை பாதுகாப்பானவை என்று ரோனன் சொல்கிறார்.
பேங்காக் முதல் பேங்காக் வரை
450 கிலோமீட்டர் தூரம் நீளும் இப்பாதையில், பேங்காக்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லலாம். முதலில் தாய்லாந்தின் முன்னைய தலைநகரான அயூத்தியாவுக்கு சென்றுவிட்டு, லோப் பூரியில் உள்ள குரங்கு ஆலயங்களைக் கண்டுவிட்டு பின்னர் காட்டு யானைகளுக்கும் புலி களுக்கும் புகலிடமாக உள்ள காவ் யாய் தேசிய பூங்காவுக்குச் செல்லலாம்.
கிராபியிலிருந்து புக்கெட் தீவுக்கு
இப்பாதை கிராபி விமான நிலையத்தில் தொடங்குகிறது. ஆவ் நாங் கடற்கரைப் பகுதி, பாங்-கா தேசிய பூங்கா, காவ் லாக் கடற்கரை ஆகியவற்றுக்குச் சென்று கடைசியாக புக்கெட் செல்லலாம். இது சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள பயணமாக இருக்கும் என்றும் இரண்டு நாள் முதல் ஒரு வாரத்தில் இதை முடித்துவிடலாம் என்றும் ரோனன் கூறினார்.