மாதங்கி இளங்கோவன்
இன்று எஃப்1 கார் பந்தயம் தொடங்குகிறது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் பந்தயக்காரர்களின் சத்தத்துக்கும் கட்டடங்களின் உயரத்துக்கும் சாலைகளின் வண்ணமிகு விளக்குகளுக்கும் இடையே, மக்கள் இப்பந்தயத்தை ஆரவாரத்துடன் காணக் காத்திருக்கின்றனர். ஈராண்டு கொள்ளைநோய் பரவல் காரணத்தால் ஏற்பட்ட இடைவெளியை, கடந்து மீண்டும் சிங்கப்பூரில் எஃப்1 கார் பந்தயம் நடக்கிறது.
இடைவெளி இருந்தால் என்ன, உற்சாகத்திற்குக் குறைவில்லை எனப் பலரும் இருக்க, அவர்களில் திரு சுப்பையா ராமசந்திரனும் ஒருவர். மொத்தம் 13 பந்தயங்களில் பணியாற்றிய அனுபவங்கொண்ட திரு சுப்பையா, தொடர்ந்து இந்த ஆண்டும் அவசரநிலை ஒருங்கிணைப்பாளராக தம் பணியைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறார்.
கார் பந்தயத் துறையில் அதிக அனுபவமுள்ள இவர், 55 தொண்டூழியர்களுக்குத் தலைவராக இருப்பதுடன் அசம்பாவிதம் ஏதேனும் நடக்குமாயின் அதற்குத் தொண்டூழியர்கள் தயார்நிலையில் இருப்பதையும் உறுதிசெய்கிறார்.
ஆசிய பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாளராக அடுத்த மூன்று நாள்களுக்குப் பந்தயத் தடத்தில் தம் முழுக் கவனத்தையும் வைத்திருப்பார் சுப்பையா.
பந்தயத்திற்காக ஆறு மாதங்கள் முன்னரே ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.
"நாம் நமது மீட்புக் கையேடை ஆராய்ந்து ஒவ்வோர் ஆண்டின் பந்தயத்திற்கேற்ப மாற்றங்கள் செய்வோம். தொண்டூழியர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றங்களைச் செய்துவிடுவோம்," என்றார் சுப்பையா.
ஒவ்வோர் ஆண்டும் மறக்க முடியாத அனுபவங்கள் பலவற்றைப் பெற்று வந்ததாக தெரிவிக்கும் இவர், தொண்டூழியர்கள், பங்கேற்பாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே தமது நோக்கம் என்கிறார். சிங்கப்பூர் மோட்டார் சைக்கிள் சமூகத்திலும் துடிப்புடன் பங்கேற்று அதனை மேம்படுத்திவரும் இவர், தம் குடும்பத்தினர் வழங்கும் ஆதரவும் நம்பிக்கையும் தமக்கு ஒரு வரமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
"மோட்டார் பந்தயங்கள் அபாயம் நிறைந்தவை என்பதால் நான் அவற்றை அதிகம் விரும்புவதற்கு ஒரு காரணமாகும். இருப்பினும் மோட்டார் பந்தயங்களில் ஆபத்து என்பது இயல்பான ஒன்று. விறுவிறுப்பின் ஒரு பகுதி அது. அந்த அம்சத்தை மோட்டார் விளையாட்டுகளில் அகற்றுவது எங்கள் வேலையல்ல. மிகச் சிறந்த நடைமுறைகளைக் கையாண்டு, ஆற்றலுடன் சிந்தித்து, அபாயங்களைச் சமாளிக்கும் ஆகச் சிறந்த திட்டத்துடன் செயல்படுவதே எங்களின் பணி," என்றார் சுப்பையா.
இவ்வாண்டின் எஃப்1 பந்தயம் அக்டோபர் 2ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதனை நேரடியாகவும் தொலைக்காட்சி வழியாகவும் கண்டு ரசிக்கலாம். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தயத்தில் ஃபெராரி கார் குழுவின் செபேஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து இவ்வாண்டின் வெற்றியாளர் யாரெனத் தெரிந்துகொள்ள சிங்கப்பூரர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அடுத்த மூன்று நாள்களுக்கு எஃப்1 பற்றிய செய்திகளை அறிந்திட தமிழ் முரசின் இணையத்தளத்துடனும் சமூக ஊடகத் தளங்களுடனும் இணைந்திருங்கள்.