எஸ். விக்னேஸ்வரி
எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு தனியிடம் உண்டு.
அரிக்கமேடு, பரங்கிப்பேட்டை, என வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த தலங்களும் இயற்கை எழில்மிக்க இடங்களும் புதுச்சேரியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் நிறைந்துள்ளன. நான் பலமுறை சென்று பார்த்தும் ரசித்த இடம் அது.
இந்தியாவுக்கு அண்மையில் சென்றிருந்தபோது, மீண்டும் புதுச்சேரிக்குச் செல்லத் திட்டமிட்டேன். அப்போது நண்பர் ஒருவர் புதுச்சேரிக்கு அருகே உள்ள ஒரு நவகிரகக் கோவிலுக்குச் செல்லுமாறு என்னிடம் கூறினார்.
அக்கோவிலைச் சென்று பார்க்க எனக்கு பெரிய ஆர்வம் இல்லையென்றாலும், சரி என்று ஒப்புக்கொண்டேன்.
புதுச்சேரியை சென்றடைந்ததும், கடற்கரைகள், ஆன்மிகத் தலங்கள், உணவகங்கள் என நான் வழக்கமாக செல்லும் இடங்களுக்குச் சென்றேன். கூடுதலாக ஒரு நாள் புதுச்சேரியில் தங்கியிருந்ததால், என் நண்பர் சொன்ன கோவிலைச் சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.
நான் தங்கியிருந்த ஆரோவில் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது மொரட்டாண்டி எனும் ஒரு சிறிய கிராமம். அங்குதான் அமைந்துள்ளது அந்த நவகிரக ஆலயம். மொரட்டாண்டி என்ற பெயரே வித்தியாசமாக இருந்தது. அதன் பின்னணியைப் பிறகு தான் தெரிந்துகொண்டேன். இந்த கிராமத்தில் ஒரு சித்தர் பல ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாகவும் அவர் முரட்டாண்டி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் கிராமத்துக்கு அப்பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
கோவில் வாசலில் நின்றபோது, இங்கு வந்ததில் பெரிய பயனில்லை என்று எனக்கு முதலில் தோன்றியது.
மொரட்டாண்டி என்ற கிராமத்தில் அமைந்திருந்தாலும் கோவில் மிகவும் அமைதியாக இருந்தது. பயணிகள் பார்த்து வியக்கும் தொன்மையான இந்துக் கோவில்களில் உள்ள உயரமான கோபுரமும் வெளியே வரிசைவரிசையாக கடைகளும் அங்கு இல்லை. பக்தர் களின் ஆரவாரமும் இல்லை.
இந்தக் கோவிலில் என்னதான் சிறப்பு என்ற ஐயத்துடனே ஆலயத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். கோவிலை வலம் வரும்போது முதலில் ஒரு சிறிய விநாயகர் சிலை இருந்தது.
அடுத்ததாக முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள். கோவிலின் நடுவே வந்து நின்றபோதுதான், இந்தக் கோவிலுடைய சிறப்பு கண்களுக்குப் புலப்பட்டது.
உயரமான சனீஸ்வரன் சிலை
மிளிரும் தங்க நிறத்தில் உயரமான சனீஸ்வரரின் உருவச் சிலை என்னை அண்ணாந்து பார்க்க வைத்தது. 27 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இச்சிலை. பீடத்தின் உயரத்தைச் சேர்த்துக்கொண்டால், முழு உயரம் 33 அடியாகும்.
உலகின் ஆக உயரமான சனீஸ்வரன் சிலை அது என்று அங்கிருந்த கோவில் ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார். அந்தச் சிலைக்கு மேல் இருந்த பதாகையும் அதையே கூறியது.
'ஸ்ரீ விஸ்வரூப மகாசனீஸ்வர பகவான்' என்ற பெயரில் அங்குள்ள சனீஸ்வரரை இந்துக்கள் வணங்குகின்றனர். அத்தனை பெரிய ஐம்பொன் சிலையை வடித்திருந்த னர்.
நான்கு கைகளுடன் காட்சி யளிக்கிறது சனீஸ்வரர் சிலை. மேலே உள்ள கரங்கள் அம்பையும் வில்லையும் ஏந்துகின்றன. கீழே உள்ள கரங்களில் முத்திரைகள் காணப்படுகின்றன. சனீஸ்வரரின் வாகனம் காக்கை எனக் கருதப் படுகிறது. இந்த கோவிலில் மட்டும் காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் சனீஸ்வரர் சிலை காட்சியளிக்கிறது.
சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை என்று கோவில் ஊழியர் குறிப்பிட்டார்.
நவகிரகம், நட்சத்திரச் சிலைகள்
இந்தக் கோவிலில் உள்ள மற்ற நவக்கிரகச் சிலைகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நவகிரகமும் அவை பார்க்க வேண்டிய திசையில் அவற்றுக்கு உரிய வாகனத்தோடு காட்சியளிக்கின்றது. ஒவ்வொரு கற்சிலையின் அடியிலும் சிறிய சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றி பசுமையான தோட்டம் உள்ளது. வெயில் சுட்டெரித்த பகலில் தோட்டத்தை அலங்கரிக்கும் மரங்களும் செடிகளும் மென்மையான காற்றும் இதமாக்கின.
இந்தப் பூந்தோட்டத்தைச் சுற்றி பஞ்சாங்கத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் வண்ணமிகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் காவல் தெய்வமாக ஒரு தேவதை உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது என்று இங்கு வந்த பிறகுதான் அறிந்துகொண்டேன்.
சில தேவதைகள் கோவில் சிற்பங்கள்போல் இருந்தாலும், வேறு சில தலை, கால் போன்ற உடல் உறுப்புகள் இல்லாமல் வேறுபட்டு காட்சியளித்தன.
மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான மரம், 12 ராசிகளுக்கும் உகந்த மரங்கள், ஒன்பது கிரகங் களைக் குறிக்கும் மரங்கள், 60 ஆண்டுகளுக்கான மரங்கள் என மொத்தம் 108 மரங்கள் இந்தத் தோட்டத்தில் நடப்பட்டுள்ளன.
நவகிரக பாதிப்பை நீக்கும் ஆற்றல் அத்தாவரங்களுக்கு உண்டு என்பது நம்பிக்கை என்று விளக்கினார் கோவில் ஊழியர்.
இந்தக் கோவிலைச் சுற்றிவந்தபோது நடுவே மற்றொரு வினோதமான சிற்பம் என் கண்ணில் பட்டது. வாஸ்துவுக்கு மனித உரு தந்து, கிட்டத்தட்ட 40 அடி நீளமான சிலை படுத்திருக்கும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்வாசலில் 34 அடி உயரமான விநாயகர் சிலை உள்ளது. 'நவக்கிரக சாந்தி கணபதி' என அழைக்கப்படும் இந்த விநாயகரின் சிற்பத்தின் வெவ்வேறு உடல் பாகங்களில் 12 நவகிரங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தைச் சுற்றி இயற்கைச் சூழல் நிறைந்திருப்பதாலும், கோவிலைச் சுற்றி ஒருசில வீடுகள் மட்டுமே இருப்பதாலும், இந்த இடத்தில் அமைதியை உணரமுடிந்தது.
சனிக்கிழமைகளில் பக்தர்கள் இக்கோவிலுக்கு திரளாக வந்து எண்ணெய் விளக்கு ஏற்றி சனீஸ் வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்பட்டது.
வியக்க வைக்கும் நோக்கம்
இக்கோவிலைப் பார்த்தபோது அது அவ்வளவு பழமையானது இல்லை என்று தோன்றியது. சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று என்னுடன் பேசிய அந்த ஆலய ஊழியர் கூறினார்.
இங்கு செதுக்கப்பட்ட பெரும்பாலான சிலைகள் பக்தர்களை மலைக்க வைக்கும் வகையில் வடிக்கப்பட்டிருந்தன. தொன்மையான கோவில் கட்டடங்கள் இல்லாத இவ்விடத்தில் பிரம்மாண்டத்தைக் கொண்டுவரும் முயற்சி போல அது தோன்றியது. அச்சிறிய கிராமத்துக்கும் அங்குள்ள மக்களின் நம்பிக்கைக்கும் என்று தனிச்சிறப்பை உருவாக்கும் முயற்சியாகக்கூட அது இருந்திருக்கலாம்.
இந்தக் கோவிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரத்தியங்கிரா ஆலயத்தில் 72 அடி உயரமான பிரத்தியங்கிரா தேவி சிலையும் அதே விழுப்புரம் மாவட்டத்தில் 12 அடி உயரமுள்ள ஐந்துமுக ஆஞ்சநேயர் அமைக்கப்பட்டுள்ளதும் நினைவுக்கு வந்தது.
இக்கோவில் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. சுங்கச் சாவடி ஒன்றுக்கு அருகில் நவகிரகம் கோவில் உள்ளது.
கோவிலுக்குள் செல்ல சிறிய கட்டணம் உண்டு. மற்ற ஆலயங்கள்போல், இங்கு பெரியளவில் வழிபாடுகள் இல்லை.
புதுச்சேரிக்கு சென்றால், இக்கோவிலையும் நீங்கள் பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.