இர்ஷாத் முஹம்மது
எஃப்1 பந்தயத்தின் இறுதிச்சுற்று தொடங்கும் முன்னர் பந்தயக் கார் ஓட்டுநர்கள் பழம்பெரும் சிறப்புக் கார்களில் தடத்தை வலம்வந்து கையசைத்து வருகையாளர்களை மகிழ்வித்தனர். மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய இந்த ஓட்டுநர் அணிவகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உயர்தர காரில் வலம்வந்தனர்.
அத்தகைய பழம்பெரும் 'மோர்கன்' ரக காரை ஓட்டிவந்தவர் சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவையான 'புரோப்நெக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு இஸ்மாயில் கஃபூர். அவர் மெக்லாரன் நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல் ரிக்கியார்டோவைத் தமது காரில் ஏற்றிவந்தார். இவ்வாண்டு அவர் 'எஃப்1' பந்தயத்தின் ஓட்டுநர் அணிவகுப்பில் பங்கெடுப்பது இது ஐந்தாவது முறை.
முதன்முறையாக 2016ஆம் ஆண்டில் ஜென்சன் புட்டன், 2017ல் டெனில் கிவ்யட், 2018ல் டேனியல் ரிக்கியார்டோ, 2019ஆம் ஆண்டில் பியர் கேஸ்லி ஆகியோரை ஏற்றி வந்தவர் இவ்வாண்டு மீண்டும் டேனியலைத் தமது காரில் ஏற்றி அழகு பார்க்கிறார்.
கார்கள் என்றாலே அதீத ஆர்வம் கொண்ட இஸ்மாயில், இந்தக் குறிப்பிட்ட 'கிளாசிக்' காரை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கினார்.
குடும்பத்தினருடன் காலை நேரங்களில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, டெம்ப்ஸீ ஹில் போன்ற பகுதிகளுக்குச் சிற்றுண்டி உண்ணச் செல்லும்போது இந்தக் காரைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
"காலை நேரங்களில் திறந்தவெளியில் காற்று வீச குடும்பத்தினருடன் இந்தக் காரை ஓட்டிச் செல்வது எனக்கு மகிழ்ச்சிதரும் அனுபவம்," என்றார் அவர்.
பிரிட்டனில் தயாரிக்கப்படும் 'மோர்கன்' ரக கார்கள் விலை உயர்ந்தவை.
இந்தக் கார்கள் $300,000 முதல் அரை மில்லியன் வெள்ளி வரையில் விற்கப்படுகின்றன.
கரும்பச்சை நிறத்திலான திரு இஸ்மாயிலின் கார், 1973ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட கார் ரகம். நான்கு பேர் அமரக்கூடிய அந்தக் கார் குறைவான எடையும் கொண்டதாம். இத்தகைய பழம்பெரும் அழகு காரில் வலம்வருவது தமக்கு மட்டுமன்றி ஓட்டுநர் அணிவகுப்பைக் காணத் திரண்ட அனைவருக்கும் களிப்பை ஊட்டியிருக்கும் என்றால் அது மிகையாகாது.