காயத்திரி காந்தி
இளையர்களுக்கு நடனத்தின் மீதான ஈர்ப்பும் ஈடுபாடும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை தேசியக் கலை மன்றம் 2019ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
இளைஞர்களுக்கு நடனத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் வேளையில், அவர்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் நடனத்தை முறைப்படி கற்றுக்கொள்ள உதவுகின்றன 'பூகி பேஸ்', 'சும்மா டான்ஸ்' போன்ற இளையர் இயக்கங்கள்.
ஒரே இயக்கத்தின் மூலம் பல நடன பாணிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இவ்விரண்டு இளையர் இயக்கங்களும் வழங்கி வருகின்றன. அடிப்படை நடன முறைகள், நாட்டிய பாணிகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைப்புத் தளங்கள் இவை.
"நடனத்தின்மீது மிகுந்த ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில், அதைக் கற்கவும் பயிற்சி செய்யவும் ஒருவரையொருவர் இணைப்பதற்குமான தளங்கள் குறைவாகவே இருந்ததை உணர்ந்தோம்," என்று கூறினார் 'பூகி பேஸ்' இயக்கத்தைத் தொடங்கிய நால்வரில் ஒருவரான லோகேஸ்வரன் சின்னப்பன்.
பல நடனக் கலைஞர்கள் தாங்களாகவே அவ்வப்போது நடனம் ஆடினாலும், அதில் சமூகம் அல்லது ஒற்றுமை உணர்வு குறைவாகவே இருக்கிறது. எல்லாரையும் அரவணைக்கும் நடன சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பைக் கண்டதால்தான் நால்வரும் ஒன்றுசேர்ந்து 'பூகி பேஸ்' இயக்கத்தைத் தொடங்கியதாக லோகேஷ் குறிப்பிட்டார்.
எல்லா நிலைகளிலும் உள்ள நடனமணிகளுக்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் 'சும்மா டான்ஸ்' என்னும் இயக்கமும். "என்னுடைய நண்பர்கள் பலருக்கு நடனமாடும் ஆசை இருந்தாலும் தங்களால் சிறப்பாக நடனமாட முடியாது என்னும் எண்ணம் அவர்களுக்குள் நிலவியதை நான் அறிந்தேன். தொடக்கநிலை நடனக் கலைஞர்கள், எந்த அனுபவமும் இல்லாத நடனக் கலைஞர்கள் போன்றோர்க்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
"எனவே வாரந்தோறும் நடனத்தில் ஆர்வமுள்ள நண்பர்களோடு அவர்களுக்குப் பழக்கமான தமிழ்ப் பாடல்களுக்கு நடனமாடத் தொடங்கினேன். இதை நடன சமூகத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக மாற்றும் முயற்சியில் உருவானது தான் இந்த 'சும்மா டான்ஸ்' இயக்கம்," என்று கூறினார் இந்த இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் அனிருத் ஸ்ரீவத்சன்.
பல்வேறு நடன பாணிகளை ஆராய்வதற்கான வாய்ப்பையும் இவ்விரண்டு இயக்கங்களும் வழங்கி வருகின்றன.
'பூகி பேஸ்' இயக்கத்தை நடத்தும் ஸ்ருதி, லோகேஷ், சிவா, நஸீயா நால்வரும், 'இந்தோ-கன்டெம்பரரி', 'ஹிப்ஹாப்', 'குத்து ஸ்வாக்', 'டான்ஸ் ஹால்', 'ஜாஸ் ஃபங்க்' என தனித்துவமிக்க நடன பாணிகளைத் தனித்தனியாகவும் கலவையாகவும் பயிற்றுவிக்கின்றனர்.
'சும்மா டான்ஸ்' இயக்கத்தினர் ஒவ்வொரு மாதமும் ஒரு கருப்பொருளைக் கொண்டு தங்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
"கருப்பொருள்களை நடனக் கலைஞர்களுடன் நடத்தும் உரையாடல்கள் மூலம் முடிவெடுக்கிறோம். கற்றுத்தரப்படும் நடன பாணிகளைப் பொறுத்து பயிற்றுவிப்பாளர்கள் மாறிக்கொண்டே இருப்பர்," என்று கூறினார் இதன் இணை ஒருங்கிணைப்பாளர் காட்யானி ரெட்டி.
வகுப்புகளை 'சும்மா', 'நாட் சோ சும்மா' என இரண்டு பிரிவுகளாக இவர்கள் பிரித்துள்ளனர்.
"புதிய பாணி அல்லது நடனத்தை புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கான 'சும்மா' வகுப்புகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கம் கொண்டவை.
"வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களும், சவாலான பாடங்களை முயல விரும்புவோர்க்கும் 'நாட் சோ சும்மா' வகுப்புகளை நடத்துகிறோம்," என்றார் இதன் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான நித்யா கிருஷ்ணன்.
இளைஞர்களை ஈர்க்க 'பூகி பேஸ்' மூன்று நாள் நடன முகாமை இவ்வாண்டுத் தொடக்கத்தில் நடத்தியது. தற்போது 'பூகி பேஸ் காணொளி தயாரிப்பு முதல் பாகம்' என்னும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
"இதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி, ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களைச் சேகரித்தோம். நான்கு வெவ்வேறு பாணிகளில் நான்கு கலைஞர்கள் நடனமிடும் காணொளியைத் தயாரித்து வெளியிடுவதே எங்களின் இலக்கு," என்று கூறினார் 'பூகி பேஸ்' இயக்கத்தின் சிவபாலா மகேந்திரன்.
முழுநேர வியாபார ஆய்வாளராக பணிபுரியும் சிவபாலா, "இதுபோன்ற புதிய முயற்சிகள் மூலம், இந்திய சமூகத்தில் நடனக் கலைஞர்களை மேம்படுத்துவது எங்கள் இலக்கு. நடனக் கலைஞர்கள் அலங்காரக் கூறுகளாகக் கருதப் படாமல், அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற தயாரிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம், இளம் நடனக் கலைஞர்கள் நம் உள்ளூர் நடனத்தின் தரத்தை மேம்படுத்துகின்றனர்," என்று குறிப்பிட்டார்.
"பூகி பேஸ் எனக்கு இதுபோல் ஒரு வாய்ப்பை வழங்காமல் இருந்திருந்தால், புதிய நடன பாணிகளில் ஆடும் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்திருக்காது. பூகி பேசில் உள்ள பயிற்றுநர்கள், சிங்கப்பூரில் உள்ள இந்திய நடனக் கலைஞர்களுக்கு அவர்களின் சொந்த பாணிகளை பரிசோதிக்கவும் ஆராய்வதற்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளனர். எனது நடனப் பயணத்தை நான் கட்டமைத்ததற்கு அடித்தளமாக இது இருந்து வருகிறது," என்று கூறினார் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் 25 வயது அருண் தவபாலன்.
'சும்மா டான்ஸ்', 'பூகி பேஸ்' இரண்டுமே ஒரு துடிப்புமிக்க நடன சமூகத்தை உருவாக்க முனைந்துள்ளன. இவை நடத்தும் வகுப்புகள், முகாம்கள் ஆகியவை மூலம் பல புதிய நட்புகளும் பிணைப்புகளும் உருவாகியுள்ளன. ஒரு சில நடவடிக்கைகளால் மிகப் பெரிய மாற்றம் வந்துவிடாது. பல சிறிய படிகள் மூலமே அந்த இலக்கை எட்ட முடியும். இப்போது புகழ்பெற்றிருக்கும் நடனக் கலைஞர்களும் ஒரு காலத்தில் தொடக்கநிலையில் இருந்தவர்களே. விடாமுயற்சியுடன் கவனம் செலுத்தினால் செழிப்பான நடன சமூகத்தை இளையர்களால் உருவாக்க இயலும்.
gayathri@sph.com.sg

