காயத்திரி காந்தி
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கும் 'ஸ்டெம்' துறைகளின் ஆற்றலை உணர்த்தும் விழாவுக்கு சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. உலகில் நடக்கும் துடிப்புமிக்க உருமாற்றங்களை ஆராய்வதை விழா அதன் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விழாவில் பற்பல புதுமையான அனுபவங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன.
"இருவழித் தொடர்புடைய நிகழ்ச்சிகள் மூலம், இந்த விழா அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் என நான் நம்புகிறேன்," என்று கூறினார் அறிவியல் நிலைய வாரியத்தின் தலைமை நிர்வாகி திரு லிம் டிட் மெங்.
இணைப் பேராசிரியரான திரு லிம், சமூக நல்வாழ்வுக்கும் சிங்கப்பூர் போன்ற மக்கள் நிறைந்த நகரங்களுக்கும், 'இடங்கள்' மிக முக்கியமானவை என்றும் 'ஸ்டெம்' துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களால்தான் நாம் கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப்பின் பாதுகாப்பான தொடர்புகளை மேற்கொள்ள முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.
விழா, 'UNTAME 2022: Spaces to Places' என்ற பெயரில் அந்தந்த இடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவற்றின் உருவாக்கம், இணைப்பு ஆகியவற்றின் மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த இடங்கள் நான்கு முக்கியப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வாழ்விடத்தின் நிலைத்தன்மை, வானியல், இணையவெளியில் தகவல்தொழில்நுட்பத் திறனும் செயற்கை நுண்ணறிவும் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவையே அந்த நான்கு பகுதிகளாகும். விழா டிசம்பர் 11 வரை வெவ்வேறு அங்கங்களுடன் நடைபெறவுள்ளது.
பலதரப்பட்ட மக்களை ஈர்க்கும் வண்ணம் நடத்தப்படும் இந்த விழா பற்றிய மேல்விவரம் அறிய, சிங்கப்பூர் அறிவியல் நிலைய இணையப்பக்கத்தை நாடலாம்.
gayathri@sph.com.sg

