காயத்திரி காந்தி
கல்வி என்பது எல்லோருக்குமானது என்பதை அடித்தளமாகக் கொண்டு, கிராமப்புறச் சமூகங்களில் உள்ள சிறுவர்களும் எளிதில் கல்வியறிவு பெறுவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது 'கிரியேட்'. கல்வி மற்றும் தொழில்முனைப்பு மூலம் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலும் ஊக்குவிப்பதிலும் கிரியேட் கவனம் செலுத்தி வருகிறது.
2018ல் மூன்று பேர் கொண்ட குழுவுடன் தொடங்கப்பட்ட இந்தச் சமூக நிறுவனம், தனது இலக்கை அடைய 'புரோஜெக்ட் சம்மிட்', 'புரோஜெக்ட் மேதா', 'கற்க கசடற', 'கிரியேட் டாக்ஸ்' எனப்படும் நான்கு திட்டங்கள் மூலம் சிறுவர்களின் கல்விக்காக நிதி திரட்டி வருகிறது. தொண்டூழியப் பயணங்கள், கற்பித்தல் நிகழ்ச்சிகளை நடத்துதல், இருமொழி நூலகங்களைத் திறப்பது, கல்வி வளங்களை உருவாக்குதல், கல்வி பற்றிய எண்ணங்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ளுதல் என ஒவ்வோர் அம்சத்துக்கு அதன் சொந்த நோக்கத்தையும் கொண்டு உள்ளது கிரியேட்.
"கல்வி என்பது முன்னேற்றத்திற்கான ஒரு கருவி. எனது எதிர்காலத்திற்கு அது முக்கியமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். சிங்கப்பூரில் சிறந்த கல்வியையும் வாழ்க்கைமுறையையும் பெறுவதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஆனால், உலகெங்கிலும் உள்ள சிறுவர்களுக்கு இது ஒரே மாதிரியாக அமையாது. மேலும், ஒவ்வொரு சிறுவரும் கல்வியைப் பெறவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்கு கிரியேட் மூலம் உதவ எண்ணுகிறேன்," என்று கூறினார் கிரியேட்டின் இணை நிறுவனர் தேவி விஜயன்.
2016ல் அனைத்துலக அமைப்பு ஒன்றுடன் நான் மேற்கொண்ட தொண்டூழியப் பயணம், கிரியேட் நிறுவனத்தைத் தொடங்க வழிவகுத்தது. பயணச் செலவு பற்றி கவலைப்படாமல், தம்முடன் கூடுதலான இளையர்களை இந்தப் பயணத்தில் பங்கேற்க ஊக்குவிக்கும் திட்டத்தை உருவாக்க விரும்பியதால் 2017ல் 'புரோஜெக்ட் சம்மிட்' தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முழுநேர ஆசிரியையாக பணிபுரியும் திருவாட்டி தேவி, திரு குமரவேலுவுடன் 'கிரியேட்'டைத் தொடங்கினார். இதுவரை இரு ஆண்டு விழாக்கள், ஐந்து அங்காடிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளது. நிலையான முறையில் நிதி திரட்டுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்களை ஒன்றிணைக்கும் தளமாக கிரியேட் அமைகிறது.
"வெவ்வேறு சிறு வணிக உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதைப் பார்ப்பது எனக்கு மனநிறைவை அளித்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இது சிறந்த வழியாக அமைந்தது" என்று கலிதியா நிறுவனத்தின் உரிமையாளர் பிரியா கூறினார்.
சென்ற மாதம் கிரியேட்டின் ஏற்பாட்டில் சிறுவர்களின் கல்விக்கு நிதி திரட்ட நடந்தேறிய தீபாவளிச் சந்தையில் இவர் பங்கேற்றார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நிதி திரட்டி இந்தியா, நேப்பாளம், கம்போடியா போன்ற நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தவும் பொருள்களையும் வளங்களையும் வழங்க பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து ஆதரவளிக்கிறது கிரியேட். அதோடு, தொண்டூழியப் பயணச் செலவுகளை ஈடுகட்டவும் நிதி பயன்படுத்தப்படுகிறது.
"கிரியேட்டுடன் என் தொண்டூழியப் பயணத்தைத் தொடங்கியதன் மூலம் என் கனவு நனவாகியுள்ளது. சிறார்களின் கல்விக்கு உதவ எப்போதுமே நான் உதவ விரும்புகிறேன். 2018ல் இந்தியாவுக்கு நாங்கள் மேற்கொண்ட தொண்டூழியப் பயணத்தின் மூலம் அங்கு உள்ள ஒரு பள்ளியில் நூலகத்தை அமைக்க நாங்கள் உதவினோம். அங்குள்ள சிறுவர்கள், ஆசிரியர்களிடமிருந்து என்னால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. தொண்டூழியப் பயணம் எனக்கு நிறைவான அனுபவமாக இருந்தது," என்று கிரியேட்டின் தொண்டூழியர்களில் ஒருவரான துர்கா தேவி கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போதும் சிறுவர்களுக்கு உதவியது கிரியேட்.
சிறுவர்களின் கனவுகளை நனவாக்க, வரும் ஆண்டுகளிலும் இன்னும் பற்பல நடவடிக்கைகளை நடத்தும் திட்டங்களை அது கொண்டுள்ளது.