தொடக்கநிலை 3 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதியாண்டுத் தேர்வுகள் இம்மாதம் நடைபெறுகின்றன. தேர்வுக்கு படிப்பதில் கவனம் செலுத்தாமல் பிள்ளைகள் மின்னியல் சாதன விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் காணும் பெற்றோருக்கு விரக்தி ஏற்படலாம்.
பிள்ளைகள் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க பொதுவாக பெற்றோர் செய்வது, தேர்வுகள் முடியும்வரை மின்னியல் சாதனங்களைப் பிள்ளைகளிடம் கொடுக்காமல் இருப்பதே.
ஆனால், நல்ல எண்ணத்தில் பெற்றோர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, பிள்ளைகளிடம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆசிரியர்களும் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
"பிள்ளைகள் பாட நூல்களைத் திறந்து வைத்திருந்தாலும், அவர்களது கவனம் அவற்றில் இருக்காது. அவர்களது சிந்தனை மின்னியல் சாதனங்களின் மீதே இருக்கும். சொல்லப் போனால், நமக்கே தெரியாமல் அவர்கள் மின்னியல் சாதனங்களை நாட முயற்சி செய்வர்," என்று வெஸ்ட் குரோவ் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மேத்யூ சிம் கூறினார்.
இணையத்தில் பிள்ளைகள் நேரம் செலவிடுவதைக் குறைக்க உதவ, அவர்கள் சூழலுக்கு தங்களைப் பழக்கிக்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும்.
முக்கியமாக, தேர்வு சமயத்தில் கணினி, தொலைக்காட்சி, கைப்பேசியில் நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, பொழுதுபோக்கிற்காக திரை முன்னால் பெற்றோர் மட்டும் அமர்ந்திருப்பது சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படாது.
எனவே, தேர்வு முடியும்வரை பெற்றோரும் திரையின் முன்னால் நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

