உண்ட பின்னர் உடல்நலனைப் பாதிக்கும் சில பழக்கங்கள் அறவே கூடாது. அப்பழக்கங்கள் பெரும்பாலும் செரிமானத்தைப் பாதிக்கும். நீண்டகால பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும். அவற்றைப் பார்க்கலாம்.
உண்ட பின்னர் குளிக்க வேண்டாம்
முதலில், சாப்பிட்ட பிறகு குளிக்கக் கூடாது. சிலருக்கு சாப்பிட்டபின் குளிக்கும் வழக்கம் உள்ளது. குறிப்பாக இரவில் உண்ட பின்னர் குளிப்பதைத் தவிர்க்கவும்.
உண்ட பின்னர் வயிற்றுப் பகுதிக்கு அதிக ரத்தம் செல்லும். குளித்தால் உடல் வெப்பநிலை மாறும். உடல் வெப்பநிலையை சரிசெய்ய, வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தத்தை உடல் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும். அதனால் செரிமானம் பாதிக்கப்படும்.
இதனால் உடலில் அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் எடையும் கூடலாம்.
பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
பெரும்பாலானோர் சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடுவார்கள். இதைச் செய்வதன் மூலம் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும்.
உண்மையில், இதைச் செய்வது வயிற்றில் அமிலத்தன்மையை உண்டாக்கும்.
மேலும், பழங்களிலுள்ள சத்து உடலில் அதிகம் சேராது என்றும் கூறப்படுகிறது.
வேக உடற்பயிற்சியைத் தவிர்க்கவும்
உணவு உட்கொண்ட பின்னர், மெதுநடை செல்லலாம். ஆனால் வேகமான உடற் பயிற்சி கூடாது. உணவுக்குப் பிந்திய வேகமான உடற்பயிற்சி செரிமானத்தைப் பாதிக்கும். வயிற்றுக் குமட்டல், வயிற்று வலி போன்றவற்றுக்கு அது இட்டுச் செல்லக் கூடும். வாந்திகூட ஏற்படலாம். அதனால் உடலில் அமிலத்தன்மை கூடலாம்.
படுக்கச் செல்வதைத் தவிர்க்கவும்
சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வது நம்மில் சிலர் செய்யும் தவறாகும். சிலருக்கு உண்ட மயக்கம் தூக்கமாக மாறும்.
அவ்வாறு தூங்கினால், உணவைச் சரியாக செரிமானம் செய்யும் ஆற்றலை வயிறு இழக்கும். தூங்கி எழும்போது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
அல்லது தூங்கி எழும்போது உணவு செரிக்காமல் இருப்பது போன்ற உணர்வு பொழுதையே கெடுக்கலாம்.
அதனால்தான் சாப்பிட்ட உடனேயே 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறப் படுகிறது.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டாம்
உணவுநேரத்திலும் உணவு உண்ட பின்னரும் நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்திய உணவில் குழம்பு, சாம்பார், ரசம், தயிர், போன்ற பல்வேறு திரவங்கள் ஏற்கெனவே உள்ளன. அத்துடன் அளவுக்கு அதிகமான தண்ணீரையும் குடித்தால் செரிமானம் மெதுவடையும்.
குனிய வேண்டாம்
சாப்பிட்ட உடனே அடிக்கடி குனிந்து நிமிரும் செயல்களில் ஈடுபட வேண்டாம். அதனால் வயிற்றில் அதிக அமிலம் சுரக்கும். வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.
தேநீர், காப்பி குடிப்பதைத் தவிர்க்கவும்
காலையில் உணவு உண்டபின்னர், காப்பி அல்லது தேநீர் குடிப்பது சிலரது வழக்கமாக இருக்கலாம். சிலர் மதிய அல்லது இரவு உணவுக்குப் பின்னரும் அவ்வாறு தேநீர் அல்லது காப்பியைக் குடிக்க விரும்பலாம்.
ஆனால் அது உடலுக்கு நல்லதல்ல. காப்பி, தேநீர் ஆகியவற்றில் ஃபீனலிக் அமிலங்கள் உள்ளன. அவை உணவில் உள்ள இரும்புச் சத்து உள்ளிட்ட சில வகை சத்துகள் உடலில் சேர்வதைத் தடுக்கும்.
புகைப்பிடித்தல்/ மது அருந்துதல்
சிலருக்கு உண்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும். அல்லது அவர்கள் மது அருந்தக் கூடும்.
ஏற்கெனவே உடலுக்குக் கேடு விளைவிக்கும் அப்பழக்கங்களை உணவு உண்ட பின்னர் மேற்கொள்ளும்போது, உடல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். அத்துடன் உடல் எடை கூடும்.
உணவு உண்ட பின்னர் ஒரே இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் நடப்பது அல்லது ஏதாவது செயலிலோ ஈடுபடுவது நல்லது.
ஆனால் அதை அளவுக்கு அதிகமாகச் செய்வது உடலுக்குப் பிரச்சினைகளைத் தரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

