சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது. இவ்வாண்டு இந்த விருதுக்குப் பொதுமக்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
பரிந்துரை செய்வதற்கான விதிகள் வருமாறு:
* விருதுக்குப் பரிந்துரைக்கப் படுபவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை வசனம், பாடல், ஊடகம் ஆகிய எட்டுத் துறைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்த எழுத்துத் திறன் பெற்றவராக விளங்க வேண்டும்.
* அவர் 1983 ஜூன் 24 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
* பரிந்துரைப்பவர், பரிந்துரை செய்யப்படுபவர் இருவரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவராகவோ நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
* பரிந்துரை செய்யப்படுபவரின் தனித் திறன்கள், அவர் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றுள்ளார் என்ற விவரங்களுடன் அவரைப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
* பரிந்துரைகளை, aavanna19@gmail.com அல்லது kiruthikavirku@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதிபெறுபவருக்கு, வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.
மேல் விவரங்களுக்கு www.singaporetamilwriters.com எனும் இணையத்தளத்தை நாடலாம்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் இம்மாதம் 16ஆம் தேதி காலை ஏழாம் ஆண்டு காப்பிய விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய நூலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போப்ராஜ் எனும் நாகை தங்கராசு தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் கலந்துகொண்டார்.
திரு. ஜோதி மாணிக்கவாசகத்தின் வாழ்த்துரை, திரு. கண்ணன் சேஷாத்ரியின் மகாபாரதம் குறித்த சிற்றுரை ஆகியவை இடம்பெற்ற நிகழ்ச்சியில், நா. வீ. விஜயபாரதிக்கு இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து வந்திருந்த முனைவர் நா. இளங்கோ, மகாபாரதத்தில் சூதும் வாதும் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
பெருந்தேவனார்் நல்லாப்பிள்ளை, வில்லிபுத்தூர் ஆழ்வார் ஆகியோர் மகாபாரதத்தைத் தமிழில் வழங்கியதை அவர் சுட்டினார்.
மகாபாரதம் மனித மனங்களின் விசித்திரங்களை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவு செய்யும் காப்பியம்; கதாபாத்திரங்களின் வழியே தர்மத்தை நிலைநிறுத்துவதும் பெண்ணின் பெருமை பேசுவதும் சகோதரத்துவத்தின் மேன்மையை எதிர்மறையில் பதிவு செய்வதும் அதன் தனித்தன்மைகள் என்றார் முனைவர் நா. இளங்கோ.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கான நோக்க உரையை வழங்கிய முனைவர் ரத்தின வெங்கடேசன், காப்பிய விழா 2022ன் நிறைவில் நன்றியுரை ஆற்றினார்.

