புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யும் தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைவராக உள்ளார். தேபாசிஷ் மொகந்தி, ஹர்வீந்தர்சிங், சுனில் ஜோஷி ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
மேற்கு மண்டலத் தேர்வாளர் அபய் குருவில்லா கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறினார். அவரது இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா கூறும்போது, "கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சி.ஏ.சி.) நாங்கள் விரைவில் அமைப்போம். அதன் நடைமுறையைப் பின்பற்றி புதிய தேர்வுக் குழுவை நியமிப்போம்," என்றார். தென்மண்டலத் தேர்வாளர் சுனில் ஜோஷி, மத்திய மண்டல தேர்வாளர் ஹர்வீந்தர் சிங் ஆகியோர் வெளியேறுகின்றனர். அவர்களுக்குப் பதிலாக புதிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார்கள். சேட்டன் சர்மா தலைமையில் ஐவர் கொண்ட தேர்வுக் குழு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது.
இதில் வெளியேறும் மூன்று பேருக்குப் பதிலாக மூன்று புதுமுகங்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தேர்வுக் குழுத் தலைவர் சேட்டன் சர்மா, தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் மட்டுமே நீடிப்பார்கள். 20 ஓவர் போட்டிகள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தப் போட்டி குறித்து நன்கு அறிந்தவர்கள் தான் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

